திருச்சியில் ஆசிரியை தேவியால்... மாவட்ட கல்வி அதிகாரிக்கு நடந்த மறக்க முடியாத சம்பவம்
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியை தேவி என்பவர் பணியாற்றி வருகிறார். ஆசிரியை தேவிக்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வுக்கான நிலுவைத்தொகை ரூ.6 லட்சம் வரவேண்டியுள்ளது இந்த நிலுவையை தொகையை விடுவிக்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலகத்தில் தேவி மனு அளித்தார். ஆனால் மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) புகழேந்தி என்பவர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது . இந்த விவகாரத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட கல்வி அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் வருவாய்துறை அதிகாரிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள், காவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், மின்வாரிய அதிகாரிகள், வேளான் துறை அதிகாரிகள் , சமூக நலத்துறை அதிகாரிகள் என தமிழ்நாட்டின் எந்த துறை அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டாலும், ஆடியோ ஆதாரத்துடன் புகார் அளித்து மாட்டிவிடலாம். அவர்கள் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கினால், அவர்கள் அந்த பிரச்சனையில் இருந்து அவ்வளவு எளிதாக தப்பிவிட முடியாது. இதுபற்றிய விழிப்புணர்வு அண்மை காலத்தில் அதிகரித்துள்ளது. பலரும் தைரியமாக புகார் அளித்து கைது செய்ய வைக்கிறார்கள். அப்படித்தான் திருச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி சிக்கியுள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளியில் பட்டதாரி ஆசிரியை தேவி பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் இளமுருகு. இவரும், அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பட்டதாரி ஆசிரியை தேவிக்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வுக்கான நிலுவைத்தொகை ரூ.6 லட்சம் வரவேண்டியிருக்கிறது.
இந்தத் தொகையை விடுவிக்க திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு (இடைநிலை) இளமுருகு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) புகழேந்தி (வயது 55), தேவியின் நிலுவைத்தொகையை விடுவிக்க வேண்டும் என்றால், தனக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று இளமுருகுவிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
6 லட்சத்தை விடுவிக்க லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியர் இளமுருகு இதுபற்றி திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக இளமுருகுவிடம் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி உள்ளார்கள். நேற்று மாலை திருச்சி மாவட்ட கல்வி அலுவலகத்தில் வைத்து இளமுருகு புகழேந்தியிடம் ரூ.30 ஆயிரத்தை வழங்கி உள்ளாராம். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புகழேந்தியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் முசிறியில் உள்ள புகழேந்தியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.














Click it and Unblock the Notifications