வங்கக்கடலில் சம்பவம்.. கொட்டி தீர்க்கப்போகும் மழை! தேதியை குறித்த வானிலை மையம்!
பருவமழை கடந்த மாதம் தொடங்கியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழையின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஜூலை 4ம் தேதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

சுமார் 1.5 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 03 ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.
01-07-2026 மற்றும் 02-07-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03-07-2026: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
04-07-2026: கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-07-2026 முதல் 07-07-2026 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
இன்று (01-07-2026) மற்றும் நாளை (02-07-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/ இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
என்னதான் ஜூலை 4ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மையம் உருவானாலும், இந்த ஆண்டு மழை போதுமான அளவுக்கு பெய்யாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை, ஜூலை மாதத்தில் வழக்கமான 280.4 மி.மீ அளவுக்கு மழைப்பொழிவு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு இதில் 94% மட்டுமே பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications