திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சால் சிக்கல்.. கைதாக வாய்ப்பு? முன்ஜாமீன் கோரி மனு!
சென்னை: முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ-வுமான அனிதா ராதா கிருஷ்ணன், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பகுதியில் ஜூன் 20 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக, தவெக நகரச் செயலாளர் செல்வம் என்பவர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மீது பி.என்.எஸ். 352 மற்றும் 353/2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் பரவின. இதற்கிடையே, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து பிரதான எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற முறையில் பேசியதாகவும், அரசியல் உள் நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications