மீண்டும் போர்க்கொடி.. எடப்பாடி கொடுத்த பதவி வேண்டாம்.. எஸ்பி வேலுமணி தரப்பு 9 சீனியர்கள் அறிக்கை!
சென்னை: எடப்பாடி பழனிசாமி அளித்த பதவி தங்களுக்கு வேண்டாம் என்று அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுகவின் அடிப்படை தொண்டர்களாக நாங்கள் தொடர்கிறோம் என்று கூறியிருக்கும் நிலையில், உங்கள் விருப்பப்படி நியமித்துள்ள பொறுப்புகள் எங்களுக்கு வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 22 எம்எல்ஏ-க்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 27 மாவட்டச் செயலாளர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதையடுத்து 4 அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதன்பின் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்து எடப்பாடி பழனிசாமியுடன் சுமூக உடன்பாட்டை எட்டினர். ஆனால் விஜயபாஸ்கர் மற்றும் சிவி சண்முகம் மட்டும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இருப்பினும் இவர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி மீண்டும் வழங்கவில்லை. இதனால் அனைவரும் அதிருப்தி அடைந்தனர்.
சில நாட்களுக்கு முன்பாக எஸ்பி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தலைமை நிலைய செயலாளராக அருணாசலம் நியமிக்கப்பட்டார். தங்கமணி, கே.சி.கருப்பணன், சண்முகநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், கே.சி.வீரமணி, பி.பாலகிருஷ்ண ரெட்டி, மாஃபா பாண்டியராஜன், திருத்தணி கோ.அரி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.மணிகண்டன், எம்எல்ஏக்கள் அருண்மொழித்தேவன், என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்டோருக்கு கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாளை தவெகவில் ஐக்கியமாகிறார்.
இந்த நிலையில் அதிமுகவின் 9 மூத்த நிர்வாகிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுகவில் மீண்டும் இணையும் போது அவரவர் வகித்து வந்த பதவிகளையே மீண்டும் வழங்க வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தோம். ஆனால் தற்போது தாங்கள் அறிவித்துள்ள பொறுப்பு பட்டியலை பார்க்கும் போது கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது போல் தெரியவில்லை.
ஏற்கனவே நாங்கள் வகித்த பதவிகளை நீங்கள் திரும்ப தரவில்லை. கால தாமதம் செய்கிறீர்கள். அதிமுக வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்களின் போது, பல முறை அவர்கள் வகித்த பதவிகளே வழங்கப்பட்ட போதிலும், நீங்கள் அவ்வாறு பதவிகளை மீண்டும் வழங்கவில்லை. இதனால் ஏராளமான அதிமுகவினர் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
பொதுச்செயலாளராக நீங்கள் எடுத்த தவறான முடிவால் தான் 2021, 2024 மற்றும் 2026 ஆகிய தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வி அடைந்து கட்சி கரைந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், தற்போது நீங்கள் அறிவித்த பொறுப்புகள் இதுபோல் உள்ளது. நீங்கள் அளித்த பதவிகள் வேண்டாம்.. கட்சித் தொண்டர்களாகவே செயல்படுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, கேபி அன்பழகன், கேசி வீரமணி, அருண்மொழி தேவன், பாலகிருஷ்ணரெட்டி, கோ. அரி உள்ளிட்ட 9 பேரின் கையெழுத்து போடப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் அதிமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications