விஜய் ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி சதியாம்.. தவெக எம்எல்ஏக்களிடம் ரூ.35 கோடி பேரமாம்! போலீசார் தகவல்
சென்னை: தவெக எம்.எல்.ஏக்களிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும், இதில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் பெயர்கள் இடம்பெற்றுள்ளது என்றும் சென்னை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தவெக எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களும், அவரது அலுவலக பணியாளர்களுமான ரமேஷ் மற்றும் கார்த்திக், யூடியூபர் திருநாவுக்கரசு உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஊத்தங்கரை தனி தொகுதி எம்.எல்.ஏ இளையராஜா திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தி வரும் IPDS திருநாவுக்கரசு தன்னிடம் மாற்றுக் கட்சியில் இணையச் சொல்லி பேரம் பேசினார் என்றும், தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார் IPDS திருநாவுக்கரசு உள்பட 3 பேர் கைது செய்துள்ளனர். மேலும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான 3 பேரை விசாரணை வளையத்தின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

35 கோடி பேரம்
ஒவ்வொரு எம்.எல்.ஏக்களிடமும் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், புகார் கூறிய தவெக எம்.எல்.ஏ இளையராஜா அதிமுகவில் இருந்து விலகி கடைசி நேரத்தில் தவெகவில் சேர்ந்தவர். அவருக்கு விஜய் ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார். தேர்தலில் அவர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகிவிட்டார். ஆனால் அவருக்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகள் கொடுக்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் இளையராஜாவுக்கு சமீபத்தில் போன் கால் ஒன்று வந்தது. அதில் IPDS திருநாவுக்கரசு பேசுவதாக கூறினார். ஒரு முக்கிய கட்சிய சேர்ந்த சிலர் கேட்டுக்கொண்டதின் பேரில் உங்களிடம் நான் பேசுகிறேன். உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் நான் வேறு வேளையில் இருக்கிறேன் என சொல்லி இணைப்பை இளையராஜா துண்டித்துள்ளார்.. ஆனால் அந்த நபர் மீண்டும் மீண்டும் போன் செய்தார். அப்போது அவர் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொன்ண்டு வரப் போகிறார்கள்.
செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு தொடர்பு
நீங்க ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாக இருந்தாலும் அந்த தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்றும் இதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் பேசியுள்ளார். இதைக்கேட்டு இளையராஜா அதிர்ச்சியடைந்ததாகவும், பின்னர் அதில் விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார். அப்போது மீண்டும் போன் செய்த திருநாவுக்கரசு நாங்கள் போன் செய்தது குறித்து யாரிடமும் தெரிவித்தால் குடும்பத்தினர் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்ததாகவும் இளையராஜா அளித்த புகாரில் கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவரது புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து சென்னை காவல் ஆணையரின் நடவடிக்கையின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, திருச்சியை சேர்ந்த நரேஷ், மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன், கார்த்திக் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களும், அவரது அலுவலக பணியாளர்களுமான ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் கரூரில் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்துவதாகவும் போலீசார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தவெக எம்.எல்.ஏக்கள் பலரிடம்
கைது செய்யப்பட்ட நரேஷ் மற்றும் தியாகராஜன் ஆகியோரை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னையில் சந்தித்து பேசியதாகவும், அவர் தான் தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசுமாறு கூறியதாகவும் சென்னை காவல்துறை அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ இளையராஜா மட்டுமின்றி, மேலும் சில தவெக எம்.எல்.ஏக்களிடம் இவர்கள் பேரத்தில் ஈடுபட்டார்கள் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் பெயரும் எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரில் இடம்பெற்றிருப்பதாகவும் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications