சி விஜயபாஸ்கரின் எம்எல்ஏ பதவி ராஜினாமா ரத்து? சபாநாயகருக்கு எதிராக அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: அதிமுக சார்பில் விராலிமலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து நேற்று முதல்வர் விஜய்யின் தவெகவில் இணைந்தார். இந்நிலையில் தான் விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஏற்றதை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுகவின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சி விஜயபாஸ்கர். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான இவர் கடந்த 2011, 2016, 20121, 2026 என 4 தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தான், சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகு சி விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியடைந்தார். சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணியின் அதிருப்தி அணியில் அங்கம் வகித்தார். முதல்வர் விஜய் சட்டசபையில் நம்பிக்கை கோரிய தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.
அதன்பிறகு, சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி அணியை சேர்ந்த பல எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிசாமி உடன் சேர்ந்தனர். சி விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிச்சாமியுடன் செல்லவில்லை. இந்நிலையில் தான் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரரிடம் வழங்கினார். ராஜினாமா முடிவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து சி விஜயபாஸ்கர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். இந்நிலையில் தான் சி விஜயபாஸ்கரின் ராஜினாமா முடிவை ஏற்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் கொறடாவாக இருக்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
''சி விஜயபாஸ்கர் அதிமுக சார்பில் விராலிமலை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கடிதம் வழங்கினார். அதனை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த விஷயத்தில் சபாநாயகர் இயந்திர தனமாக செயல்பட்டுள்ளார். அவரது இந்த செயல்பாடு அரசியல் சாசன விதிகளுக்கு முரணானது. இதனால் சி விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றதை ரத்து செய்ய வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications