அழியும் Y குரோமோசோம்? ஆண்களே இல்லாத உலகம் எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் எலியின் முக்கிய பங்கு
சென்னை: ஆண் பாலினத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான Y குரோமோசோம் படிப்படியாக அழிந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில் அதுகுறித்து தெளிவான பார்வையை சிவகங்கை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: பெண் இல்லாத ஊரிலே, புதிதாய் பூ பூப்பதில்லை என்ற பாடல் வரிகள் தெரியும். பெண் இல்லாத ஊரில் பூ பூக்காது சரி.. ஆண்களே இல்லாத உலகம் எதிர்காலத்தில் இருந்தால் எப்படி இருக்கும்??

சமீபத்தில் மரபணு அறிவியல் ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கை தற்போது வைரல் ஆகி ஆண்களே இல்லாத நிலை ஏற்படுமோ? அது தான் உலகத்தின் அழிவுக்கு வழிவகுக்குமா? என்றெல்லாம் யோசிக்க வைத்து விட்டது. இதோ சற்று நேரம் மரபணுவியலுக்குள் முங்கு நீச்சல் போடுவோம் வாருங்கள்.
மனிதனின் ஒவ்வொரு செல்களிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கின்றன. இதில் 22 ஜோடி - குரோமோசோம்களின் பெயர் ஆட்டோசோம்கள் . இவை ஒருவரின் சரும நிறம், உடல் வாகு, கண்ணின் நிறம் மற்றும் இதர உடல் சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் கவனித்துக் கொள்பவை. அந்த 23வது ஜோடியைத் தான் நீங்கள் கீழே படத்தில் பார்க்கிறீர்கள்.
23வது ஜோடி - ஒருவரின் பாலினத்தை பெண் அல்லது ஆண் என்று உருவாக்கும் வல்லமை பெற்றதாக உள்ளது. இரண்டு எக்ஸ் இருந்தால் அது பெண்மைக்கான குரோமோசோம். ஒரு எக்ஸ் ஒரு ஒய் இருந்தால் அது ஆண்மைக்கான குரோமோசோம்
ஒரு மனித சிசு கருவுக்குள் உண்டான நாளில் இருந்து 12 வது வாரம் வரை பாலினமேதுமின்றி பொதுவான மனித சிசுவாக வளருகிறது.
அந்த சிசு உருவாக தாயின் கருமுட்டையும் தந்தையின் விந்தணுவும் ஒன்றாக இணைந்து கரு உருவாகிறது. தாயிடம் இருந்தும் தந்தையிடம் இருந்து தலா ஒரு எக்ஸ் குரோமோசோம் ஒன்றிணைந்தால் அந்தக் குழந்தை பெண் குழந்தையாக வளரும். ஆயினும் தாயிடம் இருந்து எக்ஸும் தந்தையிடம் இருந்து ஒய் குரோமோசோம் சேர்ந்தால் 12வது வாரத்தில் அந்த ஒய் குரோமோசோமில் இருக்கும்
எஸ் ஆர் ஒய் (SRY)எனும் மரபணுத் தூண்டப்பட்டு அதன் விளைவாக உடல் அங்கங்களை உருவாக்கப் பயன்படும் 22 ஜோடி ஆட்டோசோம்களில் எஸ் ஓ எக்ஸ் 9 எனும் இடம் தூண்டப்பட்டு - ஆணின் இனப்பெருக்க உறுப்பான விதைப்பை உருவாகிறது.
கருவுக்குள் இருக்கும் போதே அந்த விதைப்பையில் இருந்து ஆண்மைக்கான ஹார்மோன்கள் சுரக்கப்பட்டு, அதுவரை பாலினமின்றி இருந்த சிசு - ஆண் குழந்தையாக வளரத் தொடங்குகிறது. நிற்க, இப்போது நீங்கள் கீழ்க்காணும் படத்தில் பார்த்தால் தெரியும். பெண்மைக்கான எக்ஸ் குரோமோசோம் நீளத்தில் பெரிதாக உள்ளது. ஆனால் ஒய் குரோமோசோம் சிறிதாக இருக்கிறது.

எக்ஸ் குரோமோசோமில் 1600 ஜீன்கள் உள்ளன. அதில் முக்கியமான பணியாற்றும் 900 ஜீன்களாவது உள்ளன. ஆனால் ஒய் குரோமோசோமில் பாலினத்தை முடிவு செய்யும் பணியைச் செய்யும் ஜீன்கள் - 55 என்ற அளவில் மட்டுமே உள்ளன. இவ்வாறு சிறுகச் சிறுக ஒய் குரோமோசோமில் உள்ள ஜீன்கள் இழப்பு ஏற்பட்டால் நாளடைவில் மனித இனத்தில் ஒய் குரோமோசோம் இல்லாமல் போகலாம் என்றும் ஒய் குரோமோசோம் இல்லாமல் போனால் இனப்பெருக்கம் ஏற்படாமல் தடைபடவும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த அச்சத்திற்கு மருந்தளிக்கும் விதமாக மற்றொரு ஆய்வு முடிவு நமக்கு ஆறுதல் அளிக்கிறது. ஜப்பானின் தெற்குப் பகுதியில் இருக்கும் ஒரு தீவில் டொக்குடயா ஒசிமென்சிஸ் எனும் ஸ்பைனி எலி வகை ஒன்றில் ஒய் குரோமோசோமும் எஸ் ஆர் ஒய் மரபணுவும் இல்லாமல் போயிருக்கிறது. ஆனாலும் அந்த இனத்தில், ஆண் எலிகள் - விதைப்பையுடன் பிறக்கின்றன.
என்ன சொல்றீங்க? ஒய் குரோமோசமும் இல்லாம.. அதுல எஸ் ஆர் ஒய்யும் இல்லாம, எப்டி இது சாத்தியம்? இந்த எலி வகையில் ஒய் குரோமோசோம் இல்லாமலும் 22 ஜோடி ஆட்டோசோம்களில் இருந்து குறிப்பிட்ட சிறிய இடத்தில் எஸ் ஓ எக்ஸ் ஜீன் தானாக உந்தப்பட்டு ஆண் எலிகள் உருவாவது கண்டறியப்பட்டுள்ளது. இப்போது இது மாதிரி மனித ஒய் குரோமோசோம் முழுவதுமாக இல்லாமல் போகும்.
அப்போது அந்த எலியைப் போன்றே மற்றொரு இடத்தில் இருந்து ஆண்மைக்கான மரபணு வெளிப்பாடு ஏற்படுமா? என்ன ஏது நடக்கும்?
என்பது மெதுவாகத் தான் தெரியும். மெதுவான்னா எவ்வளவு மெதுவாங்கய்யா? என்று தேவர் மகன் கமல் போலக் கேட்டால் இன்னும் 11 மில்லியன் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அப்போ இருக்கும் கவிஞர்கள் "ஆண் இல்லாத ஊரிலே
குரோமோசோமில் ஒய் இருப்பதில்லை" னு எழுதுவாங்களோ...? இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications