கீரை செய்றீங்களா.. அப்போ இந்த 5 மேட்டரை மறக்காதீங்க.. இதுல இவ்ளோ இருக்கா? அருமையான "சூப்பர் ஃபுட்"
சென்னை: ஏதாவது ஒரு கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்ள சொல்கிறார்கள்.. ஆனால், அளவுக்கு அதிகமான கீரையும் உடலுக்கு கெடுதலாகிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
அதிகமான இரும்புச்சத்துக்கள் நிறைந்த பொக்கிஷம்தான் கீரைகள்.. கலோரிகளும் மிகவும் குறை.. ஊட்டச்சத்துக்களும் நிறைவு என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் கீரையை சாப்பிட வேண்டும்.

இதனால், ரத்த சோகை பிரச்சனை நீங்கும்.. உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும்.. மலச்சிக்கல் தீரும்.. குடல் ஆரோக்கியம் பெருகும்.. வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்கள் ஆறும்.. புற்றுநோய் அபாயம் குறையும்.. உடல் எடையும் குறையும்.. நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது.
அலர்ஜிகள்: ஆனால், தினமும் அதிக அளவு கீரைகள் சாப்பிட்டால், சில பாதிப்புகள் வரலாம்... இலை பச்சை காய்கறியில் ஹிஸ்டமைன் உள்ளதால், அலர்ஜியை சில சமயம் ஏற்படுத்திவிடும்.. கீரையில் நிறைய நார்ச்சத்து வாயு, வீக்கம், பிடிப்புகள், வயிற்று பிரச்சினைகளை கொண்டுவந்துவிடும். முக்கியமாக, சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள், கீரையை நிறைய சாப்பிட்டால், ஆக்ஸாலிக் அமிலம் உடலில் உருவாகக்கூடும்..
மூட்டு பிரச்சினை இருப்பவர்களும், நிறைய கீரையை சாப்பிட்டால் கீல்வாதத்தை தந்துவிடும்.. ரத்தத்தை மெலிக்கும் சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், அவர்களும், கீரைகளை அதிகம் சாப்பிடக்கூடாது.. எதிர்வினைகள் வந்துவிடுமாம்.
பூச்சிக்கொல்லிகள்: அதேசமயம், கீரைகளில் பூச்சிகள், புழுக்கள் நிறைந்திருக்கும்.. இதற்காகவே, பூச்சிக்கொல்லி மருந்துகளும், ரசாயன உரங்களும் கலந்து அடிக்கப்படுகின்றன.. எனவே, ஆர்கானிக் கீரைகளையே அதிகம் சாப்பிட சொல்கிறார்கள்.. அல்லது வீட்டிலேயே நாம் வளர்க்கும் கீரையையும் சாப்பிடலாம்.. ஆர்கானிக் முறையில் கீரைகளை வளர்க்க முடியாதவர்கள், வெளியில் கீரைகளை வாங்கினாலும், நன்றாக அலசி எடுத்து, அதற்கு பிறகே சமைக்க வேண்டும்.
அதற்காக கீரைகளை நன்றாக வேக வைத்துவிடக்கூடாது.. அதிக அளவு தீயிலும் சமைக்கக்கூடாது.. கீரையை பொரிக்கவோ, வறுக்கவோ கூடாது.. இதனால் கீரையின் சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.
நார்ச்சத்துக்கள்: அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால்தான், கீரைகளை இரவில் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அதேபோல இறைச்சியிலும் கலந்து சாப்பிடக்கூடாது.. இறைச்சி + கீரை இரண்டுமே ஜீரணமாக நேரம் பிடிக்கும் என்பதால், இவைகளை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.. இந்த காரணத்துக்காகவே, இரவில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.. கீரைகளை எப்போது சாப்பிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
கீரைகளை பருப்புடன் சேர்த்து கடைவது அல்லது சூப் வைத்து குடிப்பது இரண்டிலுமே முழுப்பலன் கிடைக்கும்.. பிள்ளைகளுக்கு கீரையிலேயே ஆம்லெட் செய்து தந்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
கீரை ஆம்லெட்: ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி எடுத்து, பொடிப்பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு கிண்ணதில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்றாக கலக்க வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில், எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சேர்த்து வதக்கி, அதில் சுத்தம் செய்யப்பட்ட கீரையையும் கொட்டி, சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும். கீரை பாதி வெந்ததுமே, அனைத்தையும் எடுத்து, கிண்ணத்தில் கலக்கி வைத்துள்ள முட்டையில் கொட்டி நன்றாக அடிக்க வேண்டும். இப்போது வழக்கம்போல், ஆம்லெட் போடுவதைபோல, ஊற்றி எடுத்தால், கலக்கலான கீரை ஆம்லெட் ரெடி.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications