சோனம் வாங்சுக் உடல்நிலை மோசமடைந்தது.. சுகர் லெவல் வெறும் 60.. அரசுதான் பொறுப்பு என CJP எச்சரிக்கை
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5-வது நாளை எட்டியுள்ளது.
தொடர் உண்ணாவிரதம் காரணமாக பருவநிலை செயற்பாட்டாளரான சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது ரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து, கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி வெறும் சமூக வலைத்தள இயக்கமாக இல்லாமல், தற்போது டெல்லியில் நேரடியாகப் போராடி வருகிறது. நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த இளைஞர் பட்டாளம் போராடி வருகிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைத் தொடங்கிய அபிஜித் திப்கே, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகும் வரை ஓயமாட்டோம் என்று தெரிவித்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் இவர்களின் போராட்டம் 13-வது நாளை எட்டியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் தேர்வு முறைகேடுகளுக்கு மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவே முதல் தீர்வாக இருக்க வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில் பருவ நிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் கைகோர்த்துள்ளார். தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் அவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். சோனம் வாங்சுக்குடன் சேர்ந்து மாணவர் சங்க செயல்பாட்டாளர்கள் சிலரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்நிலையில், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே, சோனம் வாங்சுக்கின் தற்போதைய உடல்நிலை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார்.
"சோனம் வாங்சுக் உடல்நிலை தொடர்ந்து நலிவடைந்து வருகிறது. அவரது இரத்தத்தில் சர்க்கரை அளவு 60 mg/dL ஆகக் குறைந்துள்ளது. இரத்த அழுத்தமும் மிக மோசமான நிலைக்குச் சரிந்துள்ளது. சோனம் வாங்சுங்கிற்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு இந்த அரசே முழுப் பொறுப்பு" என அபிஜீத் திப்கே எச்சரித்துள்ளார்.
சோனம் வாங்சுக் தவிர, AISA மாணவர் அமைப்பைச் சேர்ந்த 6 மாணவர்களும் கடந்த சில நாட்களாக ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களில் ஜே.என்.யு மாணவர் தலைவர் தனிஷ் என்பவரின் சர்க்கரை அளவும் 61 ஆகக் குறைந்துள்ளது. மேலும், அமீன் மற்றும் தீபக் குமார் வர்மா ஆகிய மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர்களை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications