பெங்களூரில் 5ஆம் தேதி 7வது உலகத் திருக்குறள் மாநாடு.. அமைச்சர் தென்னரசு, இஸ்ரோ மயில்சாமி பங்கேற்பு
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் வரும் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 7வது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
பெங்களூர் செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகம், பெங்களூர் திருவள்ளுவர் சங்கம் மற்றும் தாய் மொழி கூட்டமைப்பு இணைந்து வரும் ஜூலை 5 ஆம் தேதி 7-வது உலக திருக்குறள் மாநாட்டை நடத்துகின்றன. பெங்களூர் லால்பாக் ரோட்டில் அமைந்துள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த மாநாடு நடைபெறும்.

இந்த மாநாட்டில் தமிழக அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு பங்கேற்கிறார். மேலும், இந்த மாநாட்டில் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா, செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விக்டர் லோபோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த திருக்குறள் ஆர்வலர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு நூலாக ''திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும் மாந்தநேய மாண்புகளும்" நூலை பத்மஸ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை வெளியிட, பெங்களூர் திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் முனைவர் எஸ்.டி. குமார் பெற்றுக் கொள்கிறார்.

திருக்குறள் சேர, சோழ, பாண்டியர் அரங்கத்தில் 60க்கும் மேற்பட்ட திருக்குறள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை தமிழ் பேராசிரியர்கள் சமர்ப்பிக்க உள்ளனர். பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள், கண்ணாடிப் பேழையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. திருக்குறளை மொழி பெயர்த்தவர்களைப் பாராட்டி பரிசு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, தமிழ்நாடு, வெளிநாடு, முக்கிய தமிழ் ஆர்வலர்களுக்கு சிறப்பு செய்யப்படும். மாநாட்டு அரங்கில் அமைப்புக்களின் பெயர்களை அறிவித்து சிறப்பு செய்யப்படும். திருக்குறளையொட்டி தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications