ஆஹா.. ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா! குதிரை மாதிரி டக்கென எழுந்த தங்கம்! இனி தினமும் கிடுகிடு தானா?
சென்னை: அமெரிக்காவின் வேலைவாய்ப்பு (Non-Farm Payrolls) தரவின் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) இந்த ஆண்டு வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தும் வாய்ப்பு குறைந்துள்ளதாக முதலீட்டாளர்கள் கருதியதே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
சர்வதேச ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 2.4 சதவீதம் உயர்ந்து 4,126.97 அமெரிக்க டாலராக வர்த்தகமானது. அதேபோல், அமெரிக்க தங்க ஃபியூச்சர்ஸ் விலை 1.4 சதவீதம் உயர்ந்து 4,139.20 டாலராக பதிவானது.

இதனுடன், அமெரிக்க டாலர் குறியீடு (Dollar Index) 0.7 சதவீதம் சரிந்ததால், டாலரில் விலை நிர்ணயிக்கப்படும் தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் பிற நாட்டு முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் கிடைத்தன. இதுவும் தங்கத்திற்கான தேவையை அதிகரித்தது.
தங்கம் விலை
அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த மாதத்தில் வெறும் 57,000 புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளன. ஆனால் பொருளாதார நிபுணர்கள் 1.10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்த்திருந்தனர். அதேநேரத்தில், வேலைஇல்லா திண்டாட்ட விகிதம் 4.2 சதவீதமாக இருந்தது. இதற்கு முந்தைய நாளில் வெளியான தனியார் வேலைவாய்ப்பு (Private Payrolls) தரவும் எதிர்பார்ப்பை விட குறைவாக இருந்தது.
அமெரிக்க வேலைவாய்ப்பு
இதனால் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து வருகிறதா என்ற கேள்வி சந்தையில் எழுந்துள்ளது. High Ridge Futures நிறுவனத்தின் உலோக வர்த்தகப் பிரிவு இயக்குநர் டேவிட் மெகர் கூறுகையில், "எதிர்பார்த்ததை விட குறைவான வேலைவாய்ப்பு எண்ணிக்கை வெளியானதால், இந்த ஆண்டு மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. பொதுவாக குறைந்த வட்டி விகித சூழலில் தங்கம் சிறப்பாக செயல்படும். அதனால் முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர்" என்றார்.
உலக தங்க கவுன்சில்
CME FedWatch கருவியின் கணிப்பின்படி, செப்டம்பர் மாதத்திற்குள் வட்டி உயர்வு ஏற்படும் என்ற சந்தை எதிர்பார்ப்பு 66 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக குறைந்துள்ளது. உலக தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்ட தகவலின்படி, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் மீண்டும் தங்கம் வாங்குவதை அதிகரித்துள்ளன. கடந்த மே மாதத்தில் மட்டும் உலக மத்திய வங்கிகளின் தங்க இருப்பு 41 டன் வரை அதிகரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா
இதற்கிடையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிவடைந்தது. மத்திய கிழக்கில் நீடித்து வரும் அரசியல் பதற்றமும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் தேவையை உயர்த்திய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
விலைமதிப்புள்ள உலோகங்கள்
தங்கம் மட்டுமின்றி மற்ற விலைமதிப்புள்ள உலோகங்களின் விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை 4 சதவீதம் உயர்ந்து அவுன்ஸுக்கு 61.53 டாலராகவும், பிளாட்டினம் 2.3 சதவீதம் உயர்ந்து 1,613.35 டாலராகவும், பல்லாடியம் 3.8 சதவீதம் உயர்ந்து 1,256.50 டாலராக வர்த்தகமானது. இதனால் வரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications