பாக்கெட் பாலை கொதிக்க விட்டால் சத்துகள் அழிந்துவிடுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன
சென்னை: பாலை வாங்கினால் நாம் அனைவரும் முதல் வேலையாக அதை நன்கு சூடு செய்து சில நொடிகள் கொதிக்க விடுவோம்.. பாலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை கொல்லவே இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறோம். விவசாயிகளிடம் இருந்து பாலை வாங்கும் போது இது ஓகே.. ஆனால், பாக்கெட் பாலை கொதிக்க விடலாமா.. இதனால் பாலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முன்பெல்லாம் நாம் விவசாயிகளிடம் நேரடியாகப் பாலை வாங்குவோம். அந்த பால் பாஸ்டுரைசேஷன் உட்பட எந்தவொரு பிராசஸிங் இல்லாமல் நேரடியாக நமக்கு வரும்.. எனவே, அந்த பாலில் பாக்டீரியாக்கள் இருக்கும்.

பால்: இதனால் அந்தக் காலத்தில் பாலை வாங்கும் போது கட்டாயம் கொதிக்க வைக்க வேண்டும். ஆனால், இப்போது வரும் பாக்கெட் பாலையே வாங்குகிறோம். அவை ஏற்கனவே பாஸ்டுரைசேஷன் செய்யப்பட்டு இருக்கும். எனவே, பாக்கெட் பாலை கொதிக்க விட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் போய்விடும் என ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இதனால் பாலை கொதிக்க வைக்க வேண்டுமா.. வேண்டாமா என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
மருத்துவர்கள் சொல்வது என்ன: இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "நமது நாட்டில் பாலை கொதிக்க வைக்கும் பழக்கம் என்பது கலாச்சார ரீதியாகவே வேரூன்றியுள்ளது. முன்பு உள்ளூரில் பால் வாங்கும் போது அவை பாஸ்டுரைசேஷன் செய்யப்பட்டு இருக்காது. எனவே, நோயை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளைக் கொல்ல கொதிக்கவிடுவார்கள். பாலை இதுபோல சில நொடிகள் கொதிக்கவிட்டால் சால்மோனெல்லா, க்ளோஸ்ட்ரிடியம் உள்ளிட்ட அனைத்து பாக்டீரியாக்களும் செத்துவிடும்.
நமது நாட்டில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் பால் எல்லாமே பாஸ்டுரைசேஷன் செய்யப்பட்டே வருகிறது. இதனால் பாக்கெட் பாலை கொதிக்கவிடுவதால் கூடுதலாக எந்தவொரு நன்மையும் ஏற்பட்டுவிடாது. பாக்கெட் பாலை சுமார் 4, 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் சூடு செய்தாலே போதும்.. குடிக்கும் அளவுக்கு ரெடியாகிவிடும்.
கூடுதலாகப் பாதுகாப்பு இல்லை என்ற போதிலும்.. கொதிக்க விடும் போது புரதங்கள் குறைகிறது, கொழுப்பு மூலக்கூறுகள் உடைந்து செரிமானம் எளிதாகிறது. மேலும், பாலில் உள்ள லாக்டோஸ் கேரமலைஸ் ஆகி, இனிமையான சுவையை உருவாக்குகிறது" என்கிறார்கள். அதேநேரம் பாலை கொதிக்கவிடும் போது சில வகையான சத்துகள் (வைட்டமின் பி1, பி2, பி6, பி12, வைட்டமின் சி போன்றவை) குறையும் என்றாலும் அது ரொம்பவே குறையாது என்பதால் நாம் கவலைப்பட தேவையில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்
கிராமப்புற பகுதிகள்: அதேநேரம் இதில் நாம் மற்றொரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது பால் பாஸ்டுரைசேஷன் செய்யப்பட்ட பிறகு, அது குளிர்ந்த வெப்பத்திலேயே இருக்க வேண்டும். ஒருவேளை வெப்பம் அதிகமானால் மீண்டும் அதில் பாக்டீரியாக்கள் வந்துவிடும். நமது நாட்டில் நகர் பகுதிகளில் இருப்போருக்குப் பிரச்சினை இருக்காது. உற்பத்தி முதல் பயன்படுத்துவது வரை இந்த குறைந்த வெப்பம் எளிதாகப் பராமரிக்கப்படும்.
இருப்பினும், கிராமப் புறங்களில் இதே நிலை இருக்கும் என சொல்ல முடியாது.. எனவே கிராமப் புறங்களில் இருப்போர் பாலை கொதிக்க விடுவது பாக்டீரியாக்கள் அனைத்தையும் அழிக்க உதவும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
பால் வகைகள்: மேலும், இப்போது பல பால் வகைகள் சந்தையில் கிடைக்கும் நிலையில், அனைத்தையும் ஒரே போலக் கையாள முடியாது. ஒவ்வொரு பாலுக்கும் ஒவ்வொரு நடைமுறைகள் தேவை. பசும்பால், எருமைப்பால், ஃபுல் க்ரீம் பால் ஆகியவற்றை வழக்கம் போல் காய்ச்சி பயன்படுத்தலாம்.அதேநேரம் கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலை மெதுவாகவே கொதிக்க விட வேண்டும். இல்லையென்றால் அதில் உள்ள புரதம் அழிந்துவிடும்.
அதேபோல இப்போது சிலர் பாதாம் பால், சோயா பால் உள்ளிட்ட தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட பால்களையும் பயன்படுத்துகிறார்கள். அந்த பால் வகைகளை எல்லாம் நிச்சயம் கொதிக்க வைக்கக்கூடாதாம். ஏனென்றால் அதிக வெப்பம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவையைச் சேதப்படுத்தும். பவுடர் பால் என்றால் அதில் உள்ள செயல்முறையை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.












Click it and Unblock the Notifications