தேனிலவில் பயங்கரம்.. கணவரை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொன்ற மனைவி
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவில் தேனிலவுக்காகப் போன இடத்தில் கணவரை மலை உச்சியிலிருந்து தள்ளி அவரது மனைவி கொன்று விட்டார். இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருமணமாகி ஒரே வாரத்தில் இப்படிக் கணவரைப் போட்டுத் தள்ளி விட்டார் மனைவி.
அந்தப் பெண்ணின் பெயர் ஜோர்டான் லின் கிரஹாம். இவர் மீது கணவர் கோடி-யை கொலை செய்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் ஜூலை மாதம் நடந்துள்ளது. கிளேசியர் தேசியப் பூங்கா என்ற மலைப் பகுதிக்கு தேனிலவுப் பயணமாக போயிருந்தபோது இந்தக் கொலை நடந்தது.
முன்னதாக, 22 வயதாகும் ஜோர்டான் லின் கிரஹாம், தனது கணவர் அவரது நண்பருடன் காரில் போனதாகவும் அதன் பிறகு அவரைக் காணவில்லை என்றும் போலீஸில் புகார் கொடுத்திருந்தார். ஆனால் போலீஸ் விசாரணையின்போது தனது செயலை அவர் ஒப்புக் கொண்டார்.
கோடியின் உடல் மலை அடிவாரத்தில் ஜூலை 12ம் தேதி மீட்கப்பட்டது. மலை உச்சியிலிருந்து விழுந்ததால் அவரது உடம்பில் எலும்புகள் நொறுங்கிப் போய் விட்டன.
ஜூலை 7ம் தேதிதான் இவர்கள் இருவருக்கும் திருமணமானது. அதன் பிறகு என்ன காரணத்திற்காகவோ கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. தேனிலவுப் பயணத்தில் அது சரியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொலை வரை போய் விட்டார் ஜோர்டான் லின்.