2025ல் கடைசி சான்ஸ்.. இந்திய கடலோர காவல் படையில் குரூப் ‘சி’ வேலை! இன்னும் ஒரே நாள் தான் இருக்கு!
சென்னை: மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் இந்திய கடலோர காவல் படையில் தற்போது குரூப் 'சி' பிரிவில் சில பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள இளைஞர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் இந்த மாதம் டிசம்பர் 29ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இந்திய கடலோர காவல் படை வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் ஸ்டோர் கீப்பர், இன்ஜின் ஓட்டுநர், லஸ்கர், மோட்டார் வாகன ஓட்டுநர், பியூன் மற்றும் வெல்டர் போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
சில பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி இருந்தாலே போதுமானது. சில பணிகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் குறிப்பிட்ட கால அனுபவமும் அவசியமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்ஜின் ஓட்டுநர் மற்றும் மோட்டார் வாகன ஓட்டுநர் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்கள் மற்றும் வாகனம் ஓட்டிய அனுபவம் கட்டாயமாகும்.

வயது வரம்பும் பணியிடத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. பொதுவாக 18 வயது குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு 25 முதல் 30 வரை இருக்கிறது. மேலும், அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் ஒபிசிக்கு 3 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படுகிறது. இதனால், தகுதி உள்ள பலர் இந்த வேலைவாய்ப்பைப் பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் முறை மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இந்த இரு நிலைகளிலும் தகுதி நிரூபித்தவர்கள் மட்டுமே இறுதியாக தேர்வு செய்யப்படுவர். அரசு வேலை என்பதால், இது நிரந்தரமும் பாதுகாப்பானதுமான வேலைவாய்ப்பாகும்.
விண்ணப்பிக்கும் முறை முற்றிலும் ஆஃப்லைனாகும். அதாவது, விண்ணப்பதாரர்கள் இந்திய கடலோர காவல் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indiancoastguard.gov.in-ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப வடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அஞ்சல் மூலம் சென்னை நெப்பியர் பாலம் அருகிலுள்ள "The Commander Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai - 600 006" என்ற கடலோர காவல் படை அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் போது நேரத்தில் வந்து சேரும் வகையில் முன்கூட்டியே அனுப்புவது நல்லது.விண்ணப்பங்கள் டிசம்பர் 29, 2025க்குள் அந்த அலுவலகத்தில் வந்து சேர வேண்டும். அதற்குப் பின் வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.












Click it and Unblock the Notifications