தமிழ்நாட்டில் நகராட்சிகளில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு பயிற்சி.. அரசு அறிவிப்பு
சென்னை: நகர்ப்புற இளைஞர்களுக்கு ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆடை உற்பத்திக்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி வெளியிட்டுள்ளார். அவற்றை பார்ப்போம்.

1.நகர்ப்புற இளைஞர்களுக்கு ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆடை உற்பத்திக்கான பயிற்சிகள் (Garments Training) தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படும்.
2.ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கு தொழில்நுட்ப ஜவுளித் துறையில் குறுகிய கால பயிற்சித் திட்டம் (Short Term Training on Technical Textiles) செயல்படுத்தப்படும்.
3.பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் (Polytechnic) மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்களில் (I.T.I) தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான படிப்புகள் (Technical Textile Courses) அறிமுகப்படுத்தப்படும்.
4.கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்தில், புதியதாக இரண்டு ரேப்பியர் தானியங்கி கறிகள் (New Rapier Auto Looms) நிறுவப்படும்.
5.தமிழ்நாட்டில் விளையாட்டு துறைசார் ஜவுளிகளின் (Sport-Tech and Athleisure Dresses) உற்பத்தி மற்றும் சந்தைக்கான வாய்ப்புகள் குறித்தான விரிவான ஆய்வு (Detailed Study) மேற்கொள்ளப்படும்.
இதனிடையே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் அரசின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் , "ரூ. 20 கோடியில் புதிய கைத்தறிக் குழுமங்கள் அமைக்கப்படும். 2000 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் தேசிய கைக்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும். இதேபோல் 5.55 கோடியில் 37 மாவட்டங்களில் 111 வானவில் மையங்கள் அமைக்கப்படும். வட்டார அளவில் ஒரு மாவட்டத்திற்கு 3 மையங்கள் வீதம் நிறுவப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications