ஆன்லைனில் வேலை.. லிங்கை தொட்ட நொடியில் 2.50 லட்சம் காலி.. சென்னையில் உஷார் மக்களே
சென்னை: ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக எஸ்எம்எஸ் அனுப்பி லிங்கை கிளிக் செய்ய வைத்து லட்சக்கணக்கில் பறித்த 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நூதன முறையில் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக எஸ்எம்எஸ் அனுப்பி அந்த லிங்கை கிளிக் செய்ய வைத்து பணத்தை பறிக்கிறார்கள். அதேபோல் கடன் வாங்கி தருவதாக எஸ்எம்எஸ் அனுப்பி , லிங்கை கிளிக் செய்ய வைத்து பணம் பறிக்கிறார்கள். அதேபோல் பரிசு விழுந்ததாக எஸ்எம்எஸ் அனுப்பி அந்த லிங்கை கிளிக் செய்ய வைத்து பணத்தை பறிக்கிறார்கள்.

இதேபோல் வீட்டில் இருந்து வேலை, ஐடி நிறுவனங்களில் வேலை, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை, அமேசானில் ஆபர், ப்ளிப்கார்டில் ஆபர், ஆன்லைனில் தள்ளுபடி லிங்க் என்று பல்வேறு வகையில் ஆசையை தூண்டி பணத்தை பறிக்கிறார்கள். செல்போன் பரிசு, கம்ப்யூட்டர் பரிசு, 10 லட்சம் பரிசு என பரிசுகளை காட்டியும் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.
சென்னை அரும்பாக்கத்தில் ஆன்லைன் வேலை என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் அருண் என்பவருக்கு ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக வந்த எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் இருந்த லிங்கை க்ளிக் செய்து, அதில் கொடுக்கப்பட்டிருந்த டாஸ்க்-ஐ ஒவ்வொன்றாக செய்து முடித்த போது அவரது வங்கி கணக்கில் இருந்து 2.50 லட்சம் பணம் பறிபோயிருந்தது.

இதுபற்றி சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அருண் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அருண் செலுத்திய வங்கிக் கணக்கு எண்ணை வைத்து நடந்த விசாரணையில், செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா ( 22), அண்ணாநகர் சாந்தோம் காலனியைச் சேர்ந்த விஜய் (24), ஹைதராபாத்தைச் சேர்ந்த சரஸ்வதி (23) ஆகியோர்தான் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது தெரியவந்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தைப் பெற்று, மோசடியில் ஈடுபட்ட வேறொரு கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது .
இந்த மோசடியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாகச் செயல்பட்டதும், மேலும் வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, 15 போலி ஏடிஎம் கார்டுகள், 3 செல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலை காவல்துறை தேடி வருகிறது.












Click it and Unblock the Notifications