கனிவான கவனத்திற்கு: கொரோனா தொற்று பரவல் காரணமாக.. தமிழக அரசு தொழில்நுட்ப தேர்வுகள் ஒத்திவைப்பு!
சென்னை: கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஏப்ரலில் நடைபெற இருந்த தமிழக அரசுத் தொழில்நுட்ப தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் போன்ற வணிகவியல் பாடங்களுக்கான தொழில்நுட்ப தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச் மாதம் இறுதி கடைசி நாள் என்றும் ஏப்ரல் மாதம் 17,18,24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவித்து இருந்தது. ஏராளமானோர் இந்த தேர்வுக்கு ஆர்வமுடன் தயாராகிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்த தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், புதிய தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் கூறியுள்ளது.