டிகிரி போதும்! வனத்துறையில் டேட்டா என்ட்ரி, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலை! புதுக்கோட்டையிலேயே பணி
புதுக்கோட்டை: தமிழ்நாடு வனத்துறையில் புதுக்கோட்டை வனக்கோட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளின்படி அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் புதுக்கோட்டை வனக்கோட்டத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

புதுக்கோட்டை வனக்கோட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (டெக்னிக்கல் அசிஸ்டென்ட்), தரவு நுழைவு இயக்குபவர் (டேட்டா என்ட்ரி) ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிஎஸ்சி வனவியல், வேளாண்மை அல்லது எம்எஸ்சி வனவிலங்கு உயிரியல், லைப் சயின்ஸ், தாவரவியல், விலங்கியல், நேச்சூரல் சயின்ஸ் அல்லது அதற்கு இணையான 2 ஆண்டு அனுபவம் கொண்ட களநிலை ஆராய்ச்சி செய்த அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் எம்சிஏ அல்லது அதற்கு சமமான எம்ஐஎஸ்/ஜிஐஎஸ் 2 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர தமிழ்நாடு வனத்துறையின் பணியாளர்கள் தர ஊதியம் ரூ.4,800 மற்றும் அதற்கு மேல்உரிய அனுபவத்துடன் ஒய்வு பெற்றவர்களும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி அல்லது டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து கம்ப்யூட்டர் பயன்பாடுகளில் சான்றிதழுடன் பட்டம்/டிப்ளமோ முடித்திருப்பதோடு, கம்ப்யூட்டரில் ஆங்கிலம் மற்றும் தமிழில் ‛டைப்' செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். ‛‛மாவட்ட வன அலுவலர், மாவட்ட வன அலுவலகம், புதுக்கோட்டை வனக்கோட்டம், அரசு முன்மாதிரி பள்ளி எதிரில், மச்சுவாடி, புதுக்கோட்டை - 622 004, தொலைபேசி 04322 - 2900988'' என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தியிட்டு வழங்க வேண்டும். சந்தேகம் இருப்பின் வேலை நாட்களில் மேற்கூறிய தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். இந்த பணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இது ஒரு தற்காலிக பணியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ஒருவர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஒருவர் என மொத்தம் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கான மாத சம்பளம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதியின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications