வாழ்க்கையில் ஒருமுறை தான் வரும் இந்த ஜாக்பாட்.. குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு அடிச்சிருக்குப்பா!
சென்னை: கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு உண்மையிலேயே ஜாக்பாட் கிடைக்க போகிறது. ஏனெனில் கடந்த ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட குரூப்-4 பதவிகளுக்கு காலியிடங்கள் அதிக அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 என பணியிடங்களை வகைப்படுத்தி தேர்வு நடத்தி வருகிறது. இது தவிர இந்து அறநிலையத்துறை, பத்திரப்பதிவு துறை, நூலகம் உள்பட பல்வேறு அரசு துறை சார்ந்த காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது

இதில் குரூப் 4 தேர்வு என்பது தமிழ்நாட்டில் அதிக அரசு வேலை தரும் பணியிடங்கள் ஆகும். ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு நிரப்பப்படும். கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்கள் குரூப் 4 இல் வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்பட குரூப்-4 பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப போவதாக அறிவித்து அதற்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டது.
குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். வழக்கத்தை விட மிக மிக அதிக அளவில் விண்ணப்பித்தனர். இவர்களில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்வையும் ஆர்வத்துடன் எழுதினார்கள். இந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் கிட்டத்தட்ட 10 மாதங்களை கடந்தும் வெளியிடப்படாமல் இருந்தது. குரூப் 4 தேர்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கைக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி தேர்வு முடிவு வெளியானது.
இந்த குரூப் 4 தேர்வு கிட்டத்தட்ட 3 வருடத்திற்கு பிறகு நடந்தது என்பதால், அதாவது கொரோனா காலத்திற்கு பிறகு நடந்த முதல் குரூப் 4 தேர்வு என்பதால், போட்டி தேர்வர்கள் எண்ணிக்கை வரலாற்றில் இல்லாத அளவிற்கு இருந்தது.அத்துடன் காலி பணியிடங்கள் எண்ணிக்கையும் மிகமிக அதிகமாக இருந்தது.
அதேநேரம் குரூப் 4 போட்டியாளர்கள் இந்த தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் தாங்கள் போட்டியிட்டு இருப்பதாலும் காலியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்தனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நீண்ட வருடங்களுக்கு பிறகு குரூப் 4 தேர்வு நடத்தி உள்ளதால், காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தேர்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு, அறிவிப்பின் போது வெளியான 7,301 காலி இடங்கள் இருந்த நிலையில், கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து, சமீபத்தில் 10 ஆயிரத்து 178 இடங்களாக அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
கடந்த ஜூன் 20-ந் தேதி வரையிலான நிலவரப்படி, மேலும் குரூப்-4 பதவிகளில் காலியிடங்களை அதிகரித்து புதிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி ஜூன் 30ம் தேதி வெளியிட்டுள்ளது.
இதன் படி 5 ஆயிரத்து 321 இளநிலை உதவியாளர், 3 ஆயிரத்து 377 தட்டச்சர், 1,079 சுருக்கெழுத்தர், 425 கிராம நிர்வாக அலுவலர், 69 பில் கலெக்டர், 20 கள உதவியாளர், ஒரு இருப்பு காப்பாளர் என மொத்தம் 10 ஆயிரத்து 292 காலி இடங்கள் குரூப்-4 பதவிகளில் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications