டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: 13 லட்சம் பேர் விண்ணப்பம்! ஒரு இடத்திற்கு எத்தனை பேர் போட்டி தெரியுமா?
சென்னை: டிஎன்பிஎஸ்சி அறிவித்த குரூப் 4 தேர்வு வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் எத்தனை பேர் தேர்வை எழுத போகிறார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதன்படி ஒரு காலிப்பணியிடத்திற்கு 353 தேர்வர்கள் போட்டியிடுகிறார்கள்.
குரூப் 4 தேர்வு வரும் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. விஏஒ, இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்த குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு பணி கனவுடன் காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கம் போல அமைந்து இருப்பது இந்த குரூப் 4 தேர்வுதான்.

ஹால் டிக்கெட் வெளியீடு
நன்றாக படித்து நல்ல கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றால் வேலை நிச்சயம் என்பதால் கிராமப்புற தேர்வர்கள், எளிய பின்னணி கொண்டவர்கள் என பலரும் பெரும் கனவுடன் குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். ஆண்டு தோறும் குரூப் 4 தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு 3,935 பணியிடங்களுக்காக அறிவிக்கப்பட்டது.
இதற்கான விண்ணப்ப அவகாசம் முடிந்த நிலையில், குரூப் 4 தேர்வர்கள் முழு மூச்சாக தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். குரூப் 4 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் நேற்று முன் தினம் வெளியானது. ஹால் டிக்கெட்டில் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், தேர்வரின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று இருக்கும். தேர்வு மையங்களுக்குள் ஹால் டிக்கெட் இல்லையென்றால் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
13.89 லட்சம் பேர் விண்ணப்பம்
எனவே தேர்வர்கள் உடனடியாக ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். குரூப் 4 தேர்வை பல லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிப்பதை பார்க்க முடிகிறது. கடந்த 2022-ம் ஆண்டு 7,500-க்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு சுமார் 22 லட்சத்து 3 ஆயிரம் பேர் போட்டியிட்டனர். கடந்த ஆண்டு 6,244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பின்னர் காலிப்பணியிடங்கள் படிப்படியாக 8 ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கப்பட்டது.
இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் குரூப்-4 பணிகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டது. ஆனால் கடந்த முறையை போல காலிப்பணியிடங்கள் குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு கடந்த 2 ஆம் தேதி ஹால்டிக்கெட்டும் வெளியானது. மொத்தம் 13,89,738 பேர் வருகிற 12- ம் தேதி நடைபெறும் குரூப்-4 பணிக்கான தேர்வை எழுத உள்ளனர்.
ஒரு பணியிடத்திற்கு 353 பேர்
வழக்கமாக குரூப் 4 தேர்வு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். ஆனால், இந்த முறை சனிக்கிழமை நடைபெறும். குரூப் 4 தேர்வுக்கு நடப்பு ஆண்டில் அதாவது, ஒரு பணியிடத்திற்கு 353 பேர் போட்டியிடுகிறார்கள். கடந்த முறை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. காலிப்பணியிடங்கள் குறைவாக அறிவிக்கப்பட்டதால் விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கையும் குறைந்து இருக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications