டிஎன்பிஎஸ்சி எடுத்த மேஜர் முடிவு.. ஆவின் முதல் மின்சார வாரியம் வரை.. 2024ல் எல்லாமே மாறுது.. பாருங்க
சென்னை: தமிழ்நாடு அரசு துறைகளில் காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வரும் நிலையில், வரும் ஆண்டு முதல் ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களையும் முதல்முறையாக டிஎன்பிஎஸ்சியே நிரப்ப உள்ளது. இப்புதிய பணியிடங்கள் அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு வைத்து ஆட்களை தேர்வு செய்கிறது. ஒவ்வொரு பதவியின் கல்வித்தகுதிக்கு ஏற்ப,குரூப்-1, குரூப்-2, குரூப்-2-ஏ,குரூப்-4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகளை நடத்தி தேர்வு செய்கிறது. குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட சில பதவிகளுக்கு நேர்காணல் உள்ளது. குரூப் 2ஏ, குரூப் 4 ஏ உள்ளிட்ட சில பதவிகளுக்கு நேர்காணல்களே இல்லை..

இந்நிலையில் 2024ம் ஆண்டு என்னென்ன போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்ற விவரங்கள் அடங்கிய 2024 வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த டிசம்பர் 20-ம் தேதி வெளியிட்டது. அதில் 18 வகையான பணிகளுக்கு 3772 காலியிடங்கள் நிரப்பப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் தேர்வு அட்டவணையில் ஆவின், மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பணியிடங்களை சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. முன்னதாக ஆவின், மின்சார வாரியம் உள்ளிட்ட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் அந்தந்த நிறுவனங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வந்தன.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உதவியாளர் பதவி, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் உதவியாளர் (கிரேடு-3) பதவி ஆகியவை குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ தேர்வின் கீழும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு வக்ப் வாரியத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் இளநிலை உதவியாளர், தமிழ்நாடு சிறுதொழில் கழகத்தில் இளநிலை உதவியாளர், ஆவின் நிறுவனத்தில் ஜுனியர் எக்சிகியூட்டிவ் (ஆபீஸ்), ஜுனியர் எக்சிகியூட்டிவ் (தட்டச்சு) உள்ளிட்ட பதவிகள் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வின் கீழும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் (லேப்) உள்ளிட்ட பதவிகள் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தேர்வின்கீழும், மாநிலபோக்குவரத்துக் கழகத்தில் உதவிமேலாளர் (சட்டம்), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் மேலாளர் (கிரேடு 3) - சட்டம் மற்றும் முதுநிலை அலுவலர் (சட்டம்) ஆகிய பணிகள் ஒருங்கிணைந்த சட்ட பணிகள் தேர்வின் கீழும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு பதவியிலும் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி விரைவில் அறிவிக்க உள்ளது. புதிய பணியிடங்கள் வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் சேர்க்கப்பட உள்ளது. எனவே, இப்புதிய பணியிடங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு (2024) நிரப்பப்படும்.












Click it and Unblock the Notifications