விடுதி கண்காணிப்பாளர் பதவி.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட சூப்பர் அப்டேட்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப்பணிகள் அடங்கிய துறையில், விடுதி கண்காணிப்பாளர் & உடற்பயிற்சி அலுவலர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக பணியிடங்களை அவ்வப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி நிரப்பி வருகிறது. பதவிகளுக்கு ஏற்பவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்பவும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பினை வெளியிடும். ஆண்டு தோறும் கால அட்டவணை வெளியிட்டு அதற்கு ஏற்ப தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசு வேலை கனவுடன் இருக்கும் படித்த பட்டதாரிகள் பலரும் டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை உன்னிப்பாக கவனிப்பதுண்டு. இந்த நிலையில் தான், விடுதி கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப்பணிகள் அடங்கிய துறையில், விடுதி கண்காணிப்பாளர் & உடற்பயிற்சி அலுவலர் பதவிகளில் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி: விடுதி கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து உடற்கல்வி பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். அல்லது உடற் கல்வியில் ( (Higher Grade) ஆசிரியர் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு குறையாத பணி அனுபவம் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி குறித்த விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம். வயது வரம்பை பொறுத்தவரை பொது பிரிவினர் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும். எஸ்.சி/எஸ்.டி, எம்.பி.சி, பிசி, டிசி, பிசி (ஒபிசிஎம்), பிசிஎம் உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை: எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணிணி வழியில் தேர்வு நடைபெறும். 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் வினாத்தாள் கொள்குறி (objective) வகையில் இருக்கும். இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும்.
காலை மாலை என ஒரே நாளில் இரண்டு தேர்வுகளும் நடக்கும். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். கணினி வழி போட்டித்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 21-ந்தேதி நடக்கிறது
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 35,400 - 1,30,400 (Level-11) வரை சம்பளமாக வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது. டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் இதுவரை விண்னப்பதாரர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்யாமல் இருந்தால் ரூ.150 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் செய்து வைத்த விண்ணப்பதார்களுக்கு இது பொருந்தாது.
பிற முக்கிய விவரங்கள்: தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in/ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 16.11.2023 ஆகும். விண்ணப்பதாரர்கள் https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம். தேர்வு அறிவிப்பாணையை தெரிந்து கொள்ள https://www.tnpsc.gov.in/Document/tamil/24_2023_HS_TAM_.pdf என்ற லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications