Kids Stories: பூஜா மாதிரி இருக்கணும் குட்டீஸ்.. சரியா!
அன்று பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவர் பூஜாவிடம் ஒரு நோட்டைக் கொடுத்து அதைப் பள்ளி நூலகத்தில் கொடுக்கச் சொன்னார். பூஜா வகுப்பில் முதல் மதிப்பண் எடுக்கும் மாணவி. அவள் வகுப்பில் தேஜா என்ற மாணவியும் இருந்தாள். அவளுக்கு பூஜாவைக் கண்டால் பொறாமை. அதனால் ஆசிரியர் அவளிடம் கொடுத்த நோட்டை தான் எடுத்து வைத்துக் கொண்டாள். பூஜா இடைவேளையின் போது அந்த நோட்டை மேஜையின் மேல் வைத்துச் சென்றிருந்தாள். அவள் மீண்டும் வகுப்பிற்கு வரும் போது அந்த நோட்டைக் காணாமல் திடுக்கிட்டாள்.
உடனே ஆசிரியரிடம் சென்று," டீச்சர், நான் நீங்க கொடுத்த நோட்டை மேஜை மேல் வச்சுட்டு தண்ணீர் குடிக்கப் போனேன் மிஸ்!! திரும்பி வந்துப் பார்க்கும் போது அந்த நோட்டைக் காணவில்லை டீச்சர்", என்றாள். உடனே ஆசிரியர் கோபத்துடன், என்ன பூஜா சொல்ற நீ ?"பொறுப்பான பெண் என்பதாலே நான் அந்த நோட்டை உன்கிட்ட கொடுத்தேன் ஆனால் நீ இப்படி இருப்பாய் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அது முக்கியமான நோட்டு என்று தானே உன்னிடம் கொடுத்தேன்", என்றார். பூஜா, சாரி டீச்சர்!! என்னை மன்னிச்சிடுங்க, என்றாள். அவள் திட்டு வாங்குவதைக் கண்ட தேஜா உள்ளூர மகி்ழ்ந்தாள். ஆசிரியர் பூஜாவிடம்,அந்த நோட்டை நீதான் விரைவில் கண்டுபிடித்து நூலகத்தில் ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் உனக்குத் தண்டனை நிச்சயம் என அவளை எச்சரித்து விட்டுச் சென்றார்.
தேஜா பள்ளி முடிந்தவுடன், மகிழ்ச்சியாக ஆடிப் பாடி நடந்து வந்தாள். இன்று அவளுக்கு பூஜா டீச்சரிடம் திட்டு வாங்கியதை எண்ணி சிரித்துக் கொண்டே வந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக, ரோட்டின் நடுவில் இருந்த பாறாங்கல் தடுக்கிக் கீழே விழுந்தாள். "ஐயோ!!! அம்மா!! என்னால எழுந்திருக்க முடியலியே! நான் என்னச் செய்வேன்" என்றுக் கதறினாள். அவள் குரலைக் கேட்டு பூஜா ஓடி வந்தாள். வந்து அவளைத் தூக்க முற்பட்டாள். அப்போது தான் தேஜா காலிலிருந்து கல் குத்தியதில் வலது காலில் ரத்தம் வருவதைக் கவனித்தாள். உடனே அவளுக்கு முதலுதவி செய்தாள் பூஜா. பின் வலியோடு தேஜா அவளிடம், "சாரி பூஜா!!! நீதான் எனக்கு உதவி செய்தாய். ஆனால் நான் உனக்கு ஒரு தீங்கு இழைத்து விட்டேன் ,"என்றாள்.
என்ன தேஜா சொல்ற நீ?அதெல்லாம் ஒண்ணுமில்ல! வா,வீட்டுக்குப் போலாம், என்றாள் பூஜா. இல்லை பூஜா, நான் தான் மிஸ் உன்கிட்ட கொடுத்த நோட்டைப் பொறாமையின் காரணமாக எடுத்து வைத்துக் கொண்டேன், என்னால் தான் நீ டீச்சர்கிட்ட திட்டு வாங்கினாய்!! ஆனால் நான் விழுந்தவுடன் எனக்கு நீதான் உதவினாய், என்னை மன்னிச்சிடு பூஜா!!! என்றாள் தேஜா. தன் பையிலிருந்து டீச்சர் கொடுத்த நோட்டைப் பூஜாவிடம் திருப்பிக் கொடுத்தாள்.
அன்றிலிருந்து இருவரும் நண்பர்களாயினர். இப்போது தேஜா யாரையும் பார்த்துப் பொறாமைப் படுவதில்லை. என்ன செல்லூஸ் நீங்களும் அடுத்தவர்களைப பார்த்துப் பொறாமைப்படாமல் பூஜா மாதிரி சமர்த்தா இருக்கணும் சரியா பட்டூஸ்.