குழந்தை நீதி கதைகள்: அற்புத தண்ணீரால் தலைக்கனம் ஏறிய பிரபு
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டீஸ், எப்படி இருக்கீங்க. கடந்த வாரம் ஒரு கதையை படிச்சீங்க இல்லையா. அதில் பிரபுவுக்கு அற்புத தண்ணீர் கிடைச்சதை பத்தி பார்த்துருப்பீங்க. அதுக்கு பிறகு அவனுக்கு ஏறிய தலைக்கனம் அவனை எப்படி மாத்தியது அப்படின்னு இன்னைக்கு படிக்கலாம் வாங்க.
பிரபுவின் நல்ல குணத்திற்காக கிடைத்த அற்புத தண்ணீரை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தான். இந்த தண்ணீரை பற்றி கேள்விப்பட்ட ஒரு பெரிய செல்வந்தன் தன் மனைவி நோயில் இருந்ததால் அதை சரி செய்ய தனது வேலையாளை அனுப்பி அந்த நீரை வாங்கி வர செய்தான். பிரபு இருக்கும் கிராமத்திற்கு வந்த வேலையாள், மக்கள் கூட்டமாக இருப்பதையும் மீறி உள்ளே நுழைந்தான். பிரபு அவனை தடுத்தான். அவர்கள் வரிசையில் பல நாட்களாக இருக்கிறார்கள், நீங்களும் வரிசையில் தான் நிற்க வேண்டும் என கூறினான். இதை வேலையாள் செல்வந்தரிடம் சென்று கூறினான்.

மறுநாள் செல்வந்தர் வேலையாளுடன் சென்றான். நேரில் பார்த்தவனுக்கு அந்த மக்களின் கூட்டம் வினோதமாக இருந்தது. அதனால் கண்டிப்பாக அந்த தண்ணீரில் ஏதோ இருப்பதை உணர்ந்தான். தன் மனைவிக்கு அந்த தண்ணீரை எப்படியாவது வாங்க வேண்டும் என முடிவு செய்தான். மீண்டும் வேலையாளை அனுப்பினான். இந்த முறையும் பிரபு வரிசையில் நிற்க சொன்னான். செல்வந்தர்க்கு வரிசையில் நின்று வாங்க நேரம் இல்லாததால் பணம் கொடுத்து வாங்க முடிவு செய்தான்.
வேலையாளிடம் பொற்காசுகளை கொடுத்து விட்டு, நீரை வாங்கி வர சொன்னான். பிரபு முதலில் அதற்கு ஒத்து கொள்ளவில்லை. வேலையாள் செல்வந்தரிடம் சொல்ல, அவன் இன்னும் அதிகமான பொற்காசுகளை கொடுத்து அனுப்பினான். பிரபுவிற்கு சற்று ஆசை எட்டி பார்க்க நீரை கொடுத்து அனுப்பினான்.
அந்த நீரால் செல்வந்தரின் மனைவியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது. இதே போல செல்வந்தர் பணம் கொடுக்க பிரபு அதை வாங்கி கொண்டு நீரை கொடுக்க ஆரம்பித்தான். இதே வழக்கமாக நடந்தது மக்களை விட செல்வந்தருக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தான். இந்த செய்தி காட்டு தீ போல பரவ, பல செல்வந்தர்களும் பிரபுவின் கடைக்கு வந்தார்கள். பொற்காசுகளை பெற்று கொண்டு அவர்களுக்கு நீரை கொடுக்க ஆரம்பித்தான். மக்களுக்கு உதவும் எண்ணம் அவனை விட்டு வேகமாக குறைய ஆரம்பித்தது. அதே போல பானையில் நீரும் முன்பு போல நிரம்பி வழியவில்லை. எளிய மக்களுக்கு அவன் உதவும் அளவிற்கே பானையில் நீர் நிரம்பியது.
மீண்டும் ஒருநாள் வயதான முதியவர் தள்ளாடி அவன் கடையில் நீருக்காக வந்தார். அவர் உயிர் போகும் தருவாயில் பிரபுவிடம் நீரை கேட்க அவனும் அந்த பானையில் இருந்த கடைசி டம்ளர் நீரை எடுத்து வந்தான். அந்த சமயம் செல்வந்தர் ஒருவர் அதிக பொற்காசுகளை கொடுக்க, பிரபு அந்த முதியவரிடம் அய்யா இருங்கள் இப்போதே வந்து விடுகிறேன் என சொல்லி செல்வந்தருடன் சென்றான்.
பொற்காசுகளுடன் திரும்பி வந்த பிரபு முதியவரை தேடினான். முதியவர் அங்கு இல்லை. அவனும் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றான். மறுநாள் அவனது கடையில் பானை நிரம்பி நீர் இருந்தது. மக்கள் வந்தார்கள் அவர்களுக்கு நீரை கொடுத்தான். செல்வந்தர்களும் வந்தார்கள் அவர்களிடம் பொற்காசுகளை வாங்கி கொண்டு நீரை கொடுத்தான். இந்த முறை அந்த தண்ணீரால் யாருக்கும் உடல்நிலை சரியாகவில்லை. மக்கள் வெறுத்து போய் அவன் கடைக்கு வரவில்லை. ஆனால் செல்வந்தர்கள் பிரபுவை அடித்தார்கள். காசை வாங்கி கொண்டு எங்களை ஏமாற்றுகிறாயா? என அவனை அடித்து துவைத்தார்கள். பிரபுவிற்கு எதுவுமே புரியவில்லை.

அவனது கடையில் அமைதியாக அமர்ந்து யோசித்து கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு நினைவுக்கு வந்தது, அந்த முதியவர். மிகவும் முடியாத நிலையில் அவருக்கு அவன் தண்ணீரை கொடுக்காமல் செல்வந்தரை நோக்கி சென்றான். வரும்போது முதியவரும் இல்லை. ஆனால் கடந்த முறை அவனுக்கு கூட இல்லாமல் நீரை கொடுத்து முதியவரை காப்பாற்றினான். அவனது இந்த மாற்றத்தை எண்ணி மிகவும் வெட்கி தலை குனிந்தான்.
பல நாட்கள் அந்த முதியவருக்காக பிரபு காத்திருந்தான். ஆனால் அவர் வரவில்லை. பிரபு ஒரு முடிவுக்கு வந்தான். அவனுக்கு கிடைத்த பொற்காசுகளை வைத்து ஒரு மருத்துவமனை கட்டினான். மேலும் ஒரு மருத்துவரையும் அதில் நியமித்தான். தன் கிராம மக்களுக்கு இந்த நீரை விட மருத்துவம் தான் தேவை என்பதை உணர்ந்து அவனுக்கு கிடைத்த காசுகளை வைத்து இந்த முடிவுக்கு வந்தான். மக்களும் அவனது அந்த குணத்திற்காக அவனை வாழ்த்தினார்கள். அவனும் தனது தவறை வேறு வழியில் திருத்தி கொண்டு மன நிம்மதியுடன் வாழ ஆரம்பித்தான்.












Click it and Unblock the Notifications