குழந்தை நீதி கதைகள்: நீயே இழுத்துட்ட என்னால முடியாதா?.. பேராசை கொண்ட காகத்தின் முடிவு என்ன?
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எல்லோரும் எப்படி இருக்கீங்க. சுதந்திர தின விழாவை சிறப்பாக முடிச்சிட்டு ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டீங்களா?. சரி நம்ம இன்னைக்கு என்ன கதை படிக்க போறோம் தெரியுமா. ஆணவத்தால் அழிந்த காக்கையோட கதை தான். வாங்க கதைக்குள்ள போகலாம்.
ஒரு மரத்தில நம்ம காக்கா வாழ்ந்துட்டு இருந்துச்சு. அது உணவுக்காக ரொம்ப தேடி அலைந்து கஷ்டப்பட்டு சாப்பிட்டு வந்தது. ஒரு நாள் அது ஒய்வு எடுக்க ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்தது. அப்போ அதோட தலைக்கு மேல ஒரு குட்டி செம்மறி ஆடு பறக்குற மாதிரி தெரிஞ்சிது. அட என்னடா இது அதிசயம் செம்மறி ஆடு பறக்குதேன்னு பாத்தா, அது ஒரு பெரிய கழுகு தூக்கிட்டு போகுது.

என்னடா இது, நம்மளும் தான் நல்ல பறக்குறோம். நமக்கு ஏன் இந்த சிந்தனை வரல, நல்ல ஒரு மாசத்துக்கு வச்சி சாப்பிடலாம் போலயே என யோசித்து கொண்டே ஒரு வாரம் முழுக்க ஆடுகள் இருக்கும் இடத்தை தேடி அலைந்தது. ஒரு வழியாக ஒரு பெரிய ஆட்டு கூட்டத்தை வளர்க்கும் இடத்தை அடைந்தது காக்கா.
பகலில் ஆடுகள் குறைவாக இருந்ததால், மாலை நேரம் வரட்டும் எல்லா ஆடுகளும் நன்றாக சாப்பிட்டு கொழுகொழுன்னு இருக்கும் என அங்கிருந்த மரத்திலேயே காவல் இருந்தது காக்கா. செம்மறி ஆடுகளும் மாலை நேரம் ஆனதும் அந்த இடத்திற்கு வந்தடைந்தன. இங்குதான் காக்கா பலமான யோசனை ஒன்றை போட்டது.
கழுகு தூக்கி சென்றதோ சின்ன குட்டி ஆடு, அது மூளை இல்லாமல் தூக்கி சென்று விட்டது. நாம் தான் அதிபுத்திசாலி ஆயிற்றே, நல்ல பெரிய கொழுத்த ஆட்டை தூக்க வேண்டியதுதான் என முடிவு செய்தது. அந்த கூட்டத்தில் பெரிய செம்மறி ஆட்டை தேடி கண்டுபிடித்தது.

ஆட்டின் அருகில் சென்று எப்படி தூக்கி செல்லலாம் என ஒத்திகை பார்த்தது. அதன் அலகுகளை விரித்து பார்த்து சரி செய்தது. கால்களை ஆட்டை தூக்குவதற்கு சரியாக எப்படி பிடிக்கலாம் என மடக்கி பார்த்தது. சரி ஆட்டின் மேல் ஏறி தூக்கிட்டு போக வேண்டியதுதான் என முடிவுக்கு வந்தது. ஆட்டின் மேல் உட்கார்ந்து அதன் கழுத்தில் தன்னுடைய அலகால் கவ்வ முயற்சி செய்தது. (ஹா ஹா ஹா) அதனால் முடியவில்லை. ஒவ்வொரு வகையில் தனது அலகை விரித்து முயன்றது. அதனால் முடியவில்லை.
சரி இது வேலைக்கு ஆகாது சின்ன ஆட்டு குட்டிய தூக்கிட்டு போக வேண்டியது தான் என எண்ணியது காக்கா. அங்கதான் ட்விஸ்ட் இருக்கு, காக்காவால செம்மறி ஆடு மேல இருந்து வெளிய வர முடியல, இறக்கையை விரிச்சி பறந்து ட்ரை பண்ணி பார்த்தும் பறக்க முடியல. காக்காவோட கால்கள், செம்மறி ஆட்டின் கடினமான ரோமங்களில் மாட்டி கொண்டது.
செம்மறி ஆட்டின் மேல் இருந்த காகத்தால் சிறிதும் அசைய முடியவில்லை. யாரோ வருவதை உணர்ந்த காகம் இறக்கைகளை அசைக்காமல் இருந்தது. ஆடுகளின் கூடாரத்திற்கு வந்த உரிமையாளர், காகம் அசையாமல் இருந்ததை கண்டு அதன் அருகில் சென்றார். காகம் தன்னுடைய ஆட்டை கடிக்க முயற்சி செய்திருப்பதை பார்த்த அவர், காகத்தை காப்பாற்றி அதன் கால்களில் கயிறை கட்டி தனது குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தார். காக்கா மாட்டி கொண்டு பரிதவித்தது.
ஆகையால் குழந்தைகளே, நமக்கு என்ன வருமோ அதை செய்துவிட்டால் அதுவே நமக்கு நன்மை பயக்கும். அதை விடுத்து, மற்றவர்கள் வாழ்க்கையை வாழ முயற்சிப்பதோ, அதில் நம்மால் முடியாத ஒன்றிற்கு பேராசை படுவதோ விபரீதத்தில் தான் முடியும்.












Click it and Unblock the Notifications