பாகுபலி படம் மாதிரியே நம்ம ஆபீசிலும் பல கேரக்டர்கள் சுத்துதே கவனிச்சீங்களா?
பாகுபலி அரசியல் மற்றும் அதன் கதாப்பாத்திரங்கள் எப்படி ஐடி துறையிலுள்ள ஊழியர்களுடன் ஒத்துப்போகிறது என்பதை விளக்கும் ஒரு மீம் சமூக வலைத்தளத்தில் சுற்றி வருகிறது.
சென்னை: தமிழகத்தில் பாகுபலி திரைப்படம் பார்க்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாகுபலி ஒரு கற்பனை கதாப்பாத்திரங்கள் அடங்கிய திரைப்படம் என்றபோதிலும், நிஜ வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களை நாம் அதிகம் சந்தித்திருப்போம்.
அதிலும், பிற துறைகளை போலவே, தகவல் தொழில்நுட்ப துறையிலும், அலுவலக அரசியலில் சிக்காத ஊழியர்கள் இருக்க முடியாது.
பாகுபலி அரசியல் மற்றும் அதன் கதாப்பாத்திரங்கள் எப்படி ஐடி துறையிலுள்ள ஊழியர்களுடன் ஒத்துப்போகிறது என்பதை விளக்கும் ஒரு மீம் சமூக வலைத்தளத்தில் சுற்றி வந்தது.
அடடே அருமையாக இருக்கிறதே என நினைத்தோம். அனீஷ் என்பவர் பேஸ்புக் பக்கத்திலிருந்த அந்த மீம், உங்கள் பார்வைக்கு.
ஹீரோ எப்போதும் நாமதான
இந்த மீமில் முதலில் உள்ளவர்தான் நமது ஹீரோ அமரேந்திர பாகுபலி. நம்மில் பெரும்பாலும் இவரைத்தான் நாம் என உருவகப்படுத்திக்கொள்வோம். ஏனெனில், அத்தனை தகுதியும் இருந்தும், ஆபீஸ் அரசியலில் சிக்கி உரிய ஊதிய உயர்வும், பதவியும் கிடைக்காமல் தத்தளித்தபடியே இருக்கும் கதாப்பாத்திரம் இவருடையது. பாகுபலி படத்தில், தகுதியிருந்தும், அரச பதவியை பெற இவர்படும் பாட்டை பார்த்தவர்களுக்கே இது தெரியும்.
மேற்படி நபர்கள்
பல்லாளத்தேவன் கதாப்பாத்திர படைப்பு, பாகுபலியில் மட்டுமல்ல, அலுவலகங்களிலும் பலருக்கு வில்லன்தான். ஏனெனில் இந்த மாதிரி நபர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி திறமை இருக்கும். ஆனாலும், அதை வைத்து முன்னேற விரும்பமாட்டார்கள். கடின உழைப்பு அவர்களுக்கு பிடிக்காது. பாலிடிக்ஸ் செய்தே பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதிலேயே குறியாக இருப்பார்கள்.
விசுவாசிகள்
கட்டப்பா போன்ற கதாப்பாத்திரங்கள் ஆபீசுக்கு ஒருவராவது இருப்பார்கள். அதிக சம்பளம் கொடுக்கிறேன் என்றாலும் அடுத்த கம்பெனிக்கு போக மாட்டார்கள். யார் தலைமை பொறுப்பில் உள்ளார்களோ, அவர்களுக்கு முழு விசுவாசம் காட்டி, பல வருடங்களாக ஒரே சீட்டை தேய்த்தபடி இருப்பார்கள்.
தப்பா யோசிக்கப்படாது
அவந்திகா போல அழகான ஒரு பெண் ஹெச்.ஆர்.கள் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இருப்பார்கள். ஃப்ரெஷர்களாக பார்த்து வேலைக்கு எடுத்து, சீனியர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவது இவர்கள் வேலை.
கஸ்ட(ம்)மர்கள்
காளகேயர்களை நாம் மறக்க முடியுமா. அவர்கள்தான் ஐடி நிறுவன வாடிக்கையாளர்கள் போன்றவர்கள். அவர்கள் பாட்டுக்கு அவர்கள் இஷ்டப்படி பேசிக்கொண்டிருப்பார்கள். என்ன பேசுகிறார்கள் என்பது நமக்கு தெரியாது. நாம் பேசுவது அவர்களுக்கும் புரியாது.