வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
படத்தில்அபிதகுசாலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து படம் பார்ப்பவர்களின் மனதில் இடம் பிடித்து வரும் புதுமுகம் அபிதா. உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்க்காரர்தான். இந்தக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் கீர்த்திரெட்டி. சூட்டிங் தள்ளிப் போகவே அபிதா வீட்டுக்கதவை தட்டியிருக்கிறார் டைரக்டர். முதலில் பார்த்த போது ரொம்ப சின்னப்பொண்ணாகத் தெரியவே அனுப்பி விட்டார். மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் வரச் சொல்லிப் பார்த்த போது கதைக்கு ஏற்றபடி ஒரு அப்பாவித்தனமான பெண்ணாகவும், அழகான கண்களுடன் பளிச்சிடவே அபிதா தான்பொறுத்தமானவர் என்று முடிவெடித்து அவரைத் தேர்வு செய்தார் டைரக்டர் பாலா.
அபிதாவின் பூர்வீகம் கேரளாவில் உள்ள திருவல்லா. பிளஸ் ஒன் பிரைவேட்டாகப் படித்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு வீட்டில் வைத்த பெயர் ஜெனிஷா. வீட்டில் கடைக்குட்டியான இவருக்கு மூன்று அக்காக்கள். இரண்டாவது அக்கா ப்ரீத்தியும் ஒரு நடிகைதான். ஹேராம் படத்தில் அப்பாசுடன் வரும் நர்சாக நடித்திருக்கிறார்.
அபிதாவிற்குப் போன் செய்தோம். வீட்டில்தான் இருக்கிறேன் என்றார். உடனே அவர் வசிக்கும் கோடம்பாக்கம் சூளைமேடு பத்மநாபன் நகரில் உள்ள பிளாட்டிற்குச் சென்றோம்.
யெஸ் சொல்லுங்க என்று அந்த அழகுப்பெண் அமர்ந்து சிரிக்க (அழகில் சற்றுத் தடுமாறி பேட்டியை ஆரம்பித்தோம்)
எத்தனை புதுப்படங்களில் நடிக்கிறீர்கள் அபிதா?
நிறைய படத்தில் நடிக்க அழைப்புக்கள் வந்தன. ஆனால் நான் இரண்டு கன்னடப் படங்களை மட்டுமே ஒத்துக்கொண்டிருக்கிறேன். சேது படத்தில் எனக்குக் கிடைத்த பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்ளும் மூடில் கவனமாக இருக்கிறேன். அதனால் தான் எனக்குத் தெரியாத மொழி என்றாலும் கூட கன்னடமொழிப் படங்களை ஒத்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.
சேது படம் உங்களுக்கு தல் படம் அல்ல, ஏற்கனவே சில படங்களில் நடித்திருக்கிறீர்கள் என்று சொல்லப்படுகிறதே?
இரண்டு மலையாளப் படங்களில் நடித்திருக்கிறேன். நடிக்க வேண்டிய ஆர்வத்தில் என்ன கேரக்டர் என்று கூட கேட்கவில்லை. கொஞ்சம் கிளாமரான ரோல். அதைத் தொடர்ந்து செல்வா சார் டைரக்ட் செய்த கோல்மால் என்ற படத்தில் கதாநாயகி தங்கையாக நடித்தேன். பிறந்தநாள் என்று ஒரு படத்தில் பிரகாஷ்ராஜைக் காதலிக்கும் பஞ்சாபிப் பெண்ணாக நடித்தேன். படம் இன்னும் ரிலீசாகவில்லை.
சேது படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டவுடன், நான் வேறு படத்தில் நடிக்கக்கூடாது என்று ஒப்பந்தம் போட்டாங்க. அதன் பிறகு நிறைய வாய்ப்புக்கள் வந்தன. நான் ஒத்துக்கொள்ளவில்லை. அப்போது வருத்தமா இருந்தது. அதெல்லாம் சேது படம் ரிலீசானவுடன் கிடைத்த பேரில மறைஞ்சு போச்சு.
சேது படம் ஆரம்பித்தபோது அந்தப்படம் இப்படி ஒரு வெற்றியைப் பெரும் என்று எதிர்பார்த்தீர்களா?
ஓரளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தேன். அதாவது எனக்கு நிறைய பட வாய்ப்புக்கள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி பெரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பத்திரிக்கை டிவி பேட்டிகள் ஒரு பக்கம். சிறந்த புதுமுகம் என்று இன்னொரு பக்கம். திக்குக்காடி விட்டேன். இந்தப்படத்தின் வெற்றி முழுவதும் டைரக்டரையே சாரும். எனக்குள் என்ன திறமை உண்டு என்பதை இனம் கண்டு வெளியே கொண்டு வர வைத்தவர் டைரக்டர். என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்த போது மறுப்பு சொல்லாத தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்தப் படத்தில் வரும் எல்லாக் காட்சிகளிலுமே நீங்கள் ரொம்ப சிரத்தை எடுத்துக் கொண்டு கஷ்டப்பட்டு நடிப்பதைப் போல உள்ளதே?
உண்மையைச் சொல்வதென்றால் நான் எந்தக் காட்சியிலுமே, கஷ்டப்படவில்லை. காரணம் டைரக்டர் காட்சியை விளக்கிய விதம் எனக்குள் இருந்த ஆர்வம்தான். அதோடு டைரக்டர் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஏகப்பட்ட நடிகைகளைப் பார்த்து திருப்திபடாமல் எனக்குக் கொடுத்திருப்பதால் ஒரு சேலஞ்சாக எடுத்துக் கொண்டு நடித்ததினால்தான்.
நிஜத்தில் அபிதாவுக்கு காதல் அனுபவம் உண்டா?
இதுவரை அந்த அனுபவம் ஏற்படவில்லை. சேது மூலம் வெளிப்படுத்திய நடிப்பைப் போல தொடர்ந்து நிறையப் படங்களில் நடித்து சிறந்த நடிகை என்ற பெயர் வாங்கணும் என்பது என்னோட ஆசை. அதில்தான் என் கவனம்.
அப்படின்னா கவர்ச்சிக்கு அபிதா எதிரியா?
கதைக்குத் தகுந்தவாறு கவர்ச்சி காட்டுவதில் தப்பில்லை என்ற முன்னாள் நடிகைகளின் பதிலை அபிதாவும் கிளிப்பிள்ளை போல் திரும்பத்திரும்பச் சொன்னார்.
சேது படத்தில் நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி ?
கும்பகோணத்தில் ஒரு கல்லூரியில் தான் முதல்நாள் படப்பிடிப்பு நடந்தது. விடுறை நாள் தான் என்றாலும் மாணவர்கள் கூட்டம் கூடிவிட்டது. நான் மேக்கப் போட்டுவிட்டு முதல் ஷாட்டிற்காகக் காத்திருந்த போது கூட்டத்தின் நெரிசலில் ஒரு கல் விழுந்து என் மேக்கப் பெட்டி உடைந்து விட்டது. அன்று வெள்ளிக்கிழமை. சென்டிமென்டலாக நான் ரொம்பவும் உடைந்துவிட்டேன். என்னையும் மீறி அழுகை வந்து விட்டது. எல்லாம் கடவுள் சித்தம். அந்தப் பெட்டிக்குள் வைத்திருந்த நான் வணங்கும் மாதா, ஜீசசெல்லாம் வேண்டிக்கொண்டு நடித்தேன். என்னோட பிறந்தநாளுக்காக அம்மா ஆசையாக வாங்கிக்கொடுத்தது அது. படம் வெளிவந்த பிறகுதான் தெரிந்தது அது அபசகுணமல்ல. அதிர்ஷ்டம் என்று.
ஓய்வு கிடைத்தால் என்ன செய்கிறீர்கள்?
இந்தி படிக்கிறேன். நடனம் கற்று வருகிறேன். சந்தர்ப்பம் கிடைத்தால் காமெடிப்படம் பார்ப்பபேன். எனக்கு நன்றாக ஓவியம் வரையத் தெரியும். கார்ட்டூன் படங்கள் போடுவேன்.
சேது படத்தில் உங்களைக் கண்கலங்க வைத்த மற்றும் கவர்ந்த காட்சி?
பொதுவாகப் படம் பார்க்கிறபோது நான் அழுகிற டைப் இல்ல. நான் கல்லூரிக்கு வரும்போது விக்ரம் என்னை அழைத்து உன் பெயரென்ன என்று கேட்டு மிரட்டுவது, நான் நோட்டுக்குள் மயிலிறகு வைத்திருப்பதைப் பார்த்து அவர் என்னைக் கிண்டல் செய்வது ஆகிய காட்சிகளை நான் பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். விக்ரம் மொட்டைத்தலையுடன் நொண்டி நொண்டிப் போகும்போது இளையராஜாவின் எங்கே செல்லும் பாடலைக் கேட்டு விட்டு என்னையும் அறியாமல் பயங்கரமாக அழுதுவிட்டேன்.
இவ்வாறு அபிதா தனது பேட்டியின் போது கூறினார்.