விஜய்யை அவதூறாக பேசியதாக, நடக்க முடியாத மாற்றுத் திறனாளி கைது! உடனே ரிலீஸ் செய்த கோர்ட்
கரூர்: கரூர் மாவட்டத்துக்கு வருகை தந்திருந்து முதல்வர் விஜய் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இந்நிலையில், தமிழக முதல்வரை முகநூலில் மிகவும் ஆபாசமாகவும், ஒருமையிலும் விமர்சித்த திமுக வார்டு தகவல் தொழில்நுட்ப அணி பிரமுகரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். குளித்தலை நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர் படுத்திய நிலையில், அவர், அவர் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பதால் உடனே அவரை பிணையில் விடுவித்துள்ளார் நீதிபதி.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் விஜய் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆட்சியின் ஊழல் குறித்தும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இந்தப் பேச்சு கரூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வரின் இந்த பேச்சுக்கு அன்றைய தினமே திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையான பதிலடி கொடுத்திருந்தார். இதற்கிடையே செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் சில சமூக வலைதளங்கள் வார்த்தைப் போரில் இறங்கினர்.

இந்த நிலையில், குளித்தலை அருகே பரளி கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை என்ற தங்கமணி , சமூக வலைதளமான முகநூலில் முதல்வர் விஜயை மிகவும் தரக்குறைவாகவும் ஆபாசமான வார்த்தைகளாலும் விமர்சித்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தங்கமணி, திமுகவின் வார்டு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியாக இருந்து வந்தவர் என்றும், முன்னதாக திமுக மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பல்வேறு பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பதிவுகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் குளித்தலை நகரச் செயலாளர் விஜயகுமார், குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், தமிழக முதல்வரை சமூக வலைதளத்தில் ஆபாசமாகவும் அவதூறாகவும் விமர்சித்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த குளித்தலை போலீசார், தங்கமணியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட தங்கமணி இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. திமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும், குளித்தலை தொகுதி திமுக எம்.எல்.ஏ. சந்திரன், ஒன்றியச் செயலாளர் தியாகராஜன், மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் குளித்தலை அரசு மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் அருகே திரண்டனர்.
நடக்கவே முடியாத நிலையில் இருக்கும் ஒரு மாற்றுத் திறனாளி கைது செய்யப்பட்ட போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், திமுக வழக்கறிஞர் அணி மூலம் சட்ட உதவிக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட தங்கமணியை போலீசார், குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டின் தன்மையுடன் சேர்த்து, குற்றம்சாட்டப்பட்டவர் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பதையும் கருத்தில் கொண்டு, அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற நடைமுறைகள் முடிந்தவுடன் திமுக ஐடி நிர்வாகியும் மாற்றுத்திறனாளிமான தங்கமணி விடுதலை செய்யப்பட்டார். அவரை திமுகவினர் உற்சாகத்துடன் அழைத்துச் சென்றனர்.














Click it and Unblock the Notifications