வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு: நாடாளுமன்ற துணை கமிட்டி பரிந்துரைக்கு மூப்பனார் வரவேற்பு
சென்னை:
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அப் பிரிவினருக்கான நாடாளுமன்ற துணை கமிட்டி பரிந்துரை செய்துள்ளதை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான நாடாளுமன்ற துணை கமிட்டி பரிந்துரை செய்துள்ளது வரவேற்கத்தக்கது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள் யாரும் இல்லை. அதே நேரத்தில் உயர் நீதிமன்றங்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் இப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகள் பணியாற்ற வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள உர் நீதிமன்றங்களில் பணிபுரியும் 481 நீதிபதிகளில் 15 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பையும், 5 பேர் பழங்குடியினர் வகுப்பையும் சேர்ந்தவர்கள்.
தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டம், நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கமுடியாத வகையில் உள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் தக்க திருத்தம் செய்யவேண்டும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனே மேற்கொள்ளவேண்டும். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மூப்பனார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications