ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி உடல் நல்லடக்கம்.. இறுதி ஊர்வலத்தில் ஒலித்த பழிவாங்கும் கோஷங்கள்!
டெஹ்ரான்: ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா புனிதத்தலத்தில் அடக்கம் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டது ஈரான் அரசு.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது மூத்த மகள், மருமகன், மருமகள், 14 மாத பேத்தி ஆகியோரும் கொல்லப்பட்டனர். போர்ச்சூழல் காரணமாக கமேனியின் இறுதிச் சடங்கு நடைபெறாமல் இருந்தது. இரு நாடுகளிடையே போர் சற்று தணிந்த நிலையில், கமேனியின் இறுதிச்சடங்கை ஈரான் அரசு நடத்தி வந்ததுது.

அவர்களின் மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் பல நாட்கள் நடைபெறும். டெஹ்ரான் மற்றும் கியோம் ஆகிய நகரங்களில் துவங்கிய கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நேற்று வரை நடைபெறுகின்றன. கமேனியின் உடல் அடக்கம் அவர் பிறந்த இடமான மஷாத் நகரில் நேற்று நடைபெற்றது.
'கிராண்ட் மொசல்லா' மசூதி வளாகத்தில் திறந்தவெளி மேடையில் அயதுல்லா அலி கமேனி உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கமேனியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். உலகின் சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் அடா ஹஸ்னைன் உள்ளிட்டோர் நேரில் சென்று கமேனியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இதற்கு ஈரான் நன்றி தெரிவித்தது.
இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று (ஜூலை 10) ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் முறைப்படி அலி கமேனியின் உடலை ஈரான் நல்லடக்கம் செய்தது. அந்த பகுதியில் திரளான மக்கள் திரண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
6 நாள் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு இறுதி ஊர்வலம் பிற்பகல் சுமார் 3 மணியளவில் இமாம் ரெஸா தெருவில் தொடங்கி, மாலையில் நிறைவடைந்தது. அங்கு, கமேனியின் மூத்த மகனான ஹொஜ்ஜதுலிஸ்லாம் சையத் முஸ்தபா ஹொஸைனி கமெனி இறுதித் தொழுகையை வழிநடத்தினார். இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு, கமேனி உடல் தர்காவில் அடக்கம் செய்யப்பட்டது.
துக்கம் அனுசரித்தவர்கள் ஈரான் தேசியக் கொடியையும், பழிவாங்கலைக் குறிக்கும் சிவப்புக் கொடிகளையும் ஏந்தி இருந்தனர். "அமெரிக்காவுக்கு மரணம்" மற்றும் "இஸ்ரேலுக்கு மரணம்" என்ற முழக்கங்கள் வீதிகளில் ஒலித்தன.
மறுபுறம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையே தற்காலிகமாக நிலவி வந்த போர்நிறுத்த ஒப்பந்தம் முற்றிலுமாக முறிந்து, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications