வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷார்ஜாவில் கோக-கோலா கோப்பை ஒருநாள் கிரிக்கெட் - இன்று இறுதிப் போட்டி -பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா மோதல்
ஷார்ஜா:
கோக-கோலா கோப்பைக்கான ஒருநாள் சர்வதே கிரிக்கெட் போட்டித் தொடரின் இறதி ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தானும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.
கடந்த வாரம் துவங்கிய இப் போட்டித் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியுற்ற பாகிஸ்தான் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல கடைசி இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா வழக்கம் போல மற்ற போட்டித் தொடர்களைப் போலவே தகுதிச் சுற்றுப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி சுற்றுப் போட்டியில் மட்டும் தென் ஆப்பிரிக்கா தோற்றது. பாகிஸ்தானுக்கு எதிராக அந்த அணி அடைந்த முதல் தோல்வி இதுதான்.
இப் போட்டித் தொடரில் மூன்றாவது அணியாகக் கலந்து கொண்ட இந்தியா ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றதால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.
தென் ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை இறுதிக் கட்ட ஆட்டங்களில் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பதில்லை. தகுதிச் சுற்றுகளில் சுலமாக வெற்றிபெறும் இந்த அணி இறுதிப் போட்டியிலோ அல்லது அதற்கு முந்தைய முக்கிய ஆட்டங்களிலோ தோல்வி அடைவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. கோக-கோலா கோப்பையிலும், முதல் மூன்று ஆட்டங்களில் வென்ற அந்த அணி, கடைசி சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்தது.
தற்போது கிரிக்கெட் விளையாடும் அணிகளில் வெற்றிகரமான கேப்டன் என்ற பெயரைப் பெற்றுள்ளவர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஹான்ஸி குரோனியே. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்து கோக-கோலா கோப்பையை வெல்லும் முடிவில் உள்ளார்.
மோயின்கான் தான் கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் போட்டித் தொடரிலேயே அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்துள்ளார். அவரும் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடுவார்.
ஷார்ஜாவைப் பொறுத்தவரை பாகிஸ்தானுக்குத் தான் அதிக வெற்றி உள்ளது என்று கருதப்படுகிறது. இந்த கோக-கோலா கோப்பையிலும் அந்த அணியே கோப்பையை வெல்லும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.