தமிழகத்தில் இன்று
கோழிக்கோடு:
கண்ணாடி கூண்டுக்குள் விஷப் பாம்புகளுடன் பல மணி நேரம் இருந்து சாதனை படைத்த வேலாயுதம் (53), கருநாகம் கடித்து இறந்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த இவர், அரசு ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 25 ஆண்டுகளாக விஷப் பாம்புகளுடன் இருந்து அவை பற்றி ஆராய்ச்சி செய்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் 100 விஷப் பாம்புகளுடன் ஒரு கண்ணாடி கூண்டுக்குள் 683 மணி நேரம் இருந்து சாதனை படைத்தார்.
தான் வளர்த்து வந்த விஷப் பாம்புகளுடன் பல ஊர்களுக்கும் சென்று அவர் கண்காட்சிகள் நடத்தினார். கண்ணாடி கூண்டுக்குள் பல விஷப் பாம்புகளுடன் அவர் இருந்தார். பலர் பயந்த கலந்த ஆச்சரியத்துடன் இதைப் பார்த்தனர். பல கண்காட்சிகளில் அவரை பல விஷப் பாம்புகள் கடித்தன. ஆனால் அவரது உடலில் விஷம் ஏறவில்லை.
தன் உடலில் விஷ முறிவுச் சக்தி இருப்பதைத் தெரிந்து கொண்டவுடன், தன் உடலில் விஷப் பாம்புகளைக் கடிக்கச் செய்து பல சாகசங்கள் புரிந்தார். தன் வீட்டிலேயே இத்தகைய காட்சிகளை அவர் நடத்தினார். இதைக் காண ஏராளமானவர்கள் வந்தனர்.
இந் நிலையில், தான் புதிதாகப் பிடித்து வந்த கருநாகத்துக்கு கடந்த ஏப்ரல் 24-ம் தேதி உணவு வைத்தார். அப்போது அந்தப் பாம்பு அவரைக் கடித்தது. உடனே, பாம்பு கடித்த இடத்தில் வாயை வைத்து விஷத்தை உறிஞ்சி எடுத்துவிட்டார்.
இருப்பினும், அதற்குப் பிறகு அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. கோழிக்கோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் செவ்வாய்க்கிழமை காலை இறந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.