பெங்களூரு டிராஃபிக்கை சமாளிக்க 12 கி.மீ சுரங்கப்பாதை! சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில்! ரூட் மேப்
சென்னை: சென்னை சென்டிரல் மற்றும் பெங்களூரு பையப்பனஹள்ளி இடையேயான பயண நேரத்தை வெறும் ஒரு மணி நேரமாக குறைக்கும் புல்லட் ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக பெங்களூரு நகரின் கடுமையான டிராஃபிக்கிற்கு தீர்வு காணும் வகையில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிநவீன சுரங்கப்பாதை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. இதுகுறித்த தகவல்தான் இப்போது வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் 7 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிவேக ரயில் திட்டங்களுக்கான பணிகள் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புல்லட் ரயில்கள்
பீகார் மாநிலத்தின் சப்ரா சந்திப்பு மற்றும் டெல்லியின் ஆனந்த் விகார் முனையம் இடையே புதிய வாராந்திர ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பீகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில் மவுல் டூ டெல்லி மற்றும் ஜஹிர்காட் டூ வாரணாசி இடையேயான இரண்டு கூடுதல் ரயில் சேவைகளும் காணொளி மூலம் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் போதுதான் நாடு முழுவதும் அமையவிருக்கும் புதிய 7 அதிவேக புல்லட் ரயில் காரிடார்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.
சென்னை - பரந்தூர்
இந்த 7 வழித்தடங்களில், சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் திட்டமும் இடம்பெற்றுள்ளது.. இந்த அதிவேக ரயில் சென்னை சென்டிரல் ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவிருக்கும் பரந்தூர் புதிய விமான நிலையம் ஆகிய முக்கியப் பகுதிகள் வழியாக செல்லவுள்ளது.
தமிழக எல்லைகளை தாண்டியதுமே பிறகு ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மற்றும் கர்நாடகாவின் கோலார் வழியாக பெங்களூருவின் பையப்பனஹள்ளி மற்றும் ஒயிட்பீல்டு ஆகிய பகுதிகளை இந்த வழித்தடம் சென்றடையும்.
பெங்களூரு நகருக்குள் நுழையும்போது ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ஒயிட்பீல்டு பகுதியிலிருந்து பையப்பனஹள்ளி வரை சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தடி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, அதன் வழியாகவே இந்த புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை பெங்களூரு ரயில்
இப்போதுள்ள சூழலில் சென்னை மற்றும் பெங்களூரு இடையே ரயிலில் செல்ல வேண்டுமானால் குறைந்தது 5 மணி நேரத்திற்கும் மேலாகி விடுகிறது. ஆனால் இந்த புதிய புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது 2 நகரங்களுக்கும் இடையேயான ஒட்டுமொத்த பயண நேரம் வெறும் 73 நிமிடங்களாக, அதாவது 1 மணி நேரம் 13 நிமிடங்களாகக் குறைந்துவிடும்.
அதுமட்டுமல்ல, நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள மற்ற புதிய அதிவேக ரயில் வழித்தடங்களின்படி, மும்பை டூ அகமதாபாத் இடையேயான பயணம் இனிமேல் ஜஸ்ட் 1 மணி நேரம் 57 நிமிடங்களாகக் குறையும். அதேபோல், மும்பை டூ புனே இடையேயான பயண நேரம் 48 நிமிடங்களாகவும் மாறும். பெங்களூரு - ஹைதராபாத் வழித்தடத்தில் 2 மணி நேரம் 10 நிமிடங்களிலும், புனே - ஹைதராபாத் வழித்தடத்தில் 2 மணி நேரம் 8 நிமிடங்களிலும் மக்கள் தங்களது இலக்கை அடைய முடியும்.
வட மாநிலங்களை பொறுத்தவரை, டெல்லி - லக்னோ இடையே 2 மணி நேரத்திலும், டெல்லி - வாரணாசி இடையே 3 மணி நேரம் 15 நிமிடங்களிலும், டெல்லி - சிலிகுரி இடையே 6 மணி நேரத்திலும் புல்லட் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
மத்திய அமைச்சர் குட்நியூஸ்
இதில் டெல்லி - வாரணாசி - பாட்னா புல்லட் ரயில் வழித்தடத்திற்கும் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், பாட்னா மற்றும் டெல்லி இடையேயான பயண நேரம் வெறும் 4 மணி நேரம் 41 நிமிடங்களாகக் குறைந்துவிடும் என்றும், எதிர்காலத்தில் இந்த வழித்தடத்தை சிலிகுரி வரை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
விழாவில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அடுத்த 8 வருடத்தில், பீகார் மாநிலத்திற்கு மட்டும் பெரிய அளவிலான ரயில்வே விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 200-க்கும் மேற்பட்ட புதிய ரயில்கள் வழங்கப்படும், பீகாரில் மட்டும் 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்
இந்தியாவின் முதல் புல்லட் ரயில்
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமானது கடந்த 2017 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. மும்பை மற்றும் அகமதாபாத் இடையேயான இந்த 508 கிலோமீட்டர் நீளமுள்ள அதிவேக ரயில் வழித்தடமானது, ஜப்பானின் புகழ்பெற்ற "ஷின்கான்சென்" தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி, அந்த நாட்டின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்கள் அடுத்த சில ஆண்டுகளில் எந்த கட்டத்தில் செயல்படுத்தப்படும் என்பது குறித்து ரயில்வே அமைச்சகம் விரிவான தகவல்களை பிறகு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications