அமெரிக்காவை துளியும் மதிக்காத பெஞ்சமின் நெதன்யாகு.. ஒரு இன்ச் கூட நகரமுடியாது.. மீண்டும் போர் வருமா?
அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது இஸ்ரேல். இந்த போரில் இஸ்ரேலுக்கு ஈரானின் வலிமையை மொத்தமாக குறைக்க வேண்டும், இதேபோல் லெபனானில் ஈரானுக்கு ஆதாவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பை மொத்தமாக காலி செய்ய வேண்டும். இதற்காக லெபனான் தலைநகர பெய்ரூட் வரையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் இரண்டுமே நடக்காது என்பதால் இஸ்ரேல் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. ஜெனிவாவில் இரு நாடுகளுக்கு மத்தியில் நடந்த 12 மணிநேர கூட்டத்தின் இறுதியில் இஸ்ரேல் தெற்கு லெபனானில் இருந்து முழுமையாக விலகி, இஸ்ரேல் ராணுவத்தை மொத்தமாக வெளியேற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் Lebanon Deconfliction Cell உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்கா - ஈரான் இடையே எட்டப்பட்ட 60 நாள் ஒப்பந்த பாதையை கடுமையாக பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், தெற்கு லெபனானில் உள்ள Buffer Zone-ல் இஸ்ரேல் ராணுவம் தேவைப்படும் வரை தங்கியிருக்கும் என்று தெளிவாக தெரிவித்துள்ளார். இது, வடக்கு எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்களையும், அந்நாட்டின் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.
இஸ்ரேல் உருவாக்கியுள்ள இந்த பாதுகாப்பு மண்டலம் (Buffer Zone) சுமார் 602 சதுர கிலோமீட்டர் (230 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. இது லெபனான் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 6 சதவீதம் அளவுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மூலம், ஈரான் ஆதரவு படைகள், இஸ்ரேலின் வடக்கு எல்லையை நோக்கி நகர்வதை தடுக்கும் என இஸ்ரேல் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்துக்கு பெரும் தடை
ஈரான், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் முழுமையாக விலக வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு அமெரிக்கா - ஈரான் இடையே எட்டப்பட்ட 60 நாள் ஒப்பந்த ரோடுமேப் தொடங்குவதற்கு முன்னரே தடை ஏற்படுத்தி விடுமோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இஸ்ரேல் தனது நிலையை மாற்றாவிட்டால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் பெரும் கேள்வியாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications