மதுரை மேலூரில் அமைச்சர் விஸ்வநாதன் பெண் குழந்தைகளை கையாண்ட விதத்தால் சர்ச்சை
மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற மாரத்தான் நிகழ்ச்சியில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சரும், மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான விஸ்வநாதன் பெண் குழந்தைகளை கையாண்ட விதம் சர்ச்சையாகி உள்ளது. ஓட்டப்பந்தயத்தில் பெண் குழந்தைகளுக்கு காலில் சொடுக்கு போட்டுவிட்டதுடன், அவர்களின் கால்களை பிடித்துவிட்டார். இதனை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
குழந்தைகளுடன் பழகும் போது, அவர்களின் தனிப்பட்ட எல்லைகளையும், மரியாதைகளையும் மதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் மேலூரில் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது. இந்த விழாவினை உயர்கல்வி துறை அமைச்சரும், மேலூர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான விஸ்வநாதன், தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடந்த கலை நிகழ்ச்சியில் விஜய்யின் சினிமா பாடல் ஒன்றுக்கு அமைச்சர் விஸ்வநாதன் மேடையில் ஆடினார்.
வாடி வாடி கைப்படாத சிடி என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. விஜய்யின் அந்த பாடலுக்கு அமைச்சருடன் சேர்ந்து கூட்டத்தில் இருந்த சிறுவர்கள் உட்பட பலரும் ஆடினர்.
தொடர்ந்து அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டிக்கிறோம், கடுமையாக எதிர்க்கிறோம். சட்டமன்றத்தில் இதற்கென தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு, காவிரி ஒழுங்கு முறை ஆணையத்தின் முடிவுகள் தமிழக மக்களுக்கு சாதகமாக இருக்கிறது.

கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுடன் கலந்து பேசித்தான் அணை கட்டுவது உள்பட எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டும். கர்நாடக முதல்-மந்திரி தன்னிச்சையாக எடுக்கும் முடிவை ஏற்க முடியாது. மேகதாதுவில் ஒரு செங்கல்லை கூட வைப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்காது.
இன்னும் கால் நூற்றாண்டுக்கு மேல் தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையில்தான் ஆட்சி நடைபெறும். தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ் பேரியக்கம், கூட்டணி கட்சிகள் இணைந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு சிறந்த ஆட்சியை நிச்சயம் வழங்குவோம்.
கேரள முதல்வர், முல்லைபெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்று கூறுவதும் ஏற்புடையது கிடையாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும். கேரளாவில் உள்ள காங்கிரஸ் முதல்வர் புதிய அணை கட்டுவோம் என்று கூறினாலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நான் அதனை கடுமையாக எதிர்க்கிறேன். எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
சோழவந்தான் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலை பிரச்சினை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் அனுமதிக்கும் பட்சத்தில் அதுபற்றி விவாதிக்கப்படும். விரைவில் அந்த சர்க்கரை ஆலை திறக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையோடு நானும் இணைந்து கொள்கிறேன். சட்டசபை நிகழ்வுகள் நேரலை செய்யப்படவில்லை என்ற எதிர்க்கட்சியின் விமர்சனத்திற்கு, ஒரு தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே அது தடைபட்டதே தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை என்றார்.
முன்னதாக விழாவில் அமைச்சர் விஸ்வநாதன் பெண் குழந்தைகளை கையாண்ட விதம் சர்ச்சையாகி உள்ளது. ஓட்டப்பந்தயத்தில் பெண் குழந்தைகளுக்கு காலில் சொடுக்கு போட்டுவிட்டதுடன், அவர்களின் கால்களை பிடித்துவிட்டார். இதனை சிலர் தவறு என்று விமர்சித்துள்ளார்.














Click it and Unblock the Notifications