“இப்போ என் ஆக்ஸிஜனே தமிழ் ரசிகர்கள் தான்…” ‘நூறு சாமி’ பட சம்பவம்.. வீடியோவில் கதறி அழுத சுவாசிகா!
சென்னை: சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'நூறு சாமி' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அந்த படத்தின் பெரிய பேசுபொருளாக மாறியிருப்பவர் நடிகை சுவாசிகா தான். இந்தப் படத்தில் வெறும் கதாநாயகியாக மட்டும் அல்லாமல், கதையின் ஆன்மாவாகவே மாறியிருக்கிறார் என்ற பாராட்டு அவரைச் சுற்றி தொடர்ந்து குவிந்து கொண்டிருக்கிறது.
அதற்கிடையே, ரசிகர்கள் கொடுத்த அன்பால் நெகிழ்ந்து சுவாசிகா வெளியிட்டுள்ள உருக்கமான நன்றி பதிவு மற்றும் கண்கலங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சுவாசிகா பதிவு
சுவாசிகா தனது சமூக வலைதளப் பதிவில், "எல்லா தமிழ் மக்களுக்கும் என்னுடைய பெரிய நன்றி. நன்றியைத் தவிர இப்போது என்னால் வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. என் மீது நீங்கள் காட்டும் அன்பையும் ஆதரவையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் கதாநாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படம் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாகி, இத்தனை பெரிய வரவேற்பைப் பெறும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
ஆனால் இன்று அது நிஜமாகியுள்ளது" என்று எழுதியுள்ளார். இந்த ஒரு வரிகளில் கூட, 'நூறு சாமி' அவருக்கு ஒரு சாதாரண படம் அல்ல என்பதை உணர முடிகிறது.
கதறி அழுத நடிகை
அவர் அதில் மேலும், "தமிழ் ரசிகர்கள் கொடுக்கும் இந்த மாபெரும் ஆதரவிற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னுடைய ஆக்ஸிஜனே தமிழ் ரசிகர்கள் தான். இனி வரும் காலங்களில் இன்னும் பொறுப்புடன் கதைகளைத் தேர்வு செய்து, உங்களை ஏமாற்றாத வகையில் கடினமாக உழைத்து நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வரிகள் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் அதை வைரலாக்கி, "இது சுவாசிகாவின் நேர்மையான நன்றி... ஒரு நடிகையின் மனசார வந்த வார்த்தைகள்" என்று பாராட்டி வருகின்றனர்.
நூறு சாமி படத்தின் வெற்றி
'நூறு சாமி' படத்தின் கதையும் சாதாரணமான ஒன்றல்ல. 23 வயதிலேயே கணவனை இழந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து வளர்க்கிறார். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தன்னுக்கும் இரண்டாவது திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாக அவர் சொல்லும் போது, குடும்பத்துக்குள் அதிர்ச்சி வெடிக்கிறது. அதில் ஒருவன் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
ஆனால் காலம் செல்ல செல்ல தன் அம்மாவின் வலியை புரிந்துகொள்ளும் அந்த மகன், அவருக்கே மறுமணம் செய்து வைக்க முனைகிறான். அந்தப் பயணத்தில்தான் அந்த பெண்ணின் மன உலகம், சமூகத்தின் பார்வை, குடும்பத்தின் ஏற்றுக்கொள்ளுதல், ஒரு பெண்ணின் தனிமை, தாய்மையின் சுமை என இவை எல்லாம் சேர்ந்து 'நூறு சாமி'யை வெறும் படமாக இல்லாமல் ஒரு உணர்ச்சி அனுபவமாக மாற்றியிருக்கிறது.
இந்த கதையின் மையத்தில் இருக்கும் அந்த பெண்ணாக சுவாசிகா நடித்திருக்கிறார் என்று சொல்வதற்குப் பதிலாக, அவர் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிட்டார் என்பதே படம் பார்த்த பலரின் கருத்து. சில காட்சிகளில் அவர் பேசும் வசனங்களைவிட, முகத்தில் தெரியும் வெட்கம், ஏக்கம், தயக்கம், உடைந்து போகும் மனநிலை, தாயாக தன்னை அடக்கிக் கொள்வது என இவைதான் ரசிகர்களை அதிகமாகத் தொட்டிருக்கிறது. அதனால்தான் படம் ரிலீஸான பிறகு "இது சுவாசிகாவின் career best performance" என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது.

காலில் விழுந்த இயக்குனர் மிஷ்கின்
படத்தின் பிரமோஷன் காலத்திலேயே சுவாசிகாவின் நடிப்பை பற்றி பலரும் பெரிய அளவில் பேச ஆரம்பித்திருந்தனர். குறிப்பாக இயக்குநர் மிஷ்கின், படத்தை பார்த்தபின் சுவாசிகாவின் நடிப்பால் மெய்மறந்து, அவரது காலில் விழுந்து பாராட்டிய சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டது.
"இவ்வளவு தத்ரூபமாக, இவ்வளவு உடைந்த மனநிலையோடு ஒரு கதாபாத்திரத்தை யாராவது இப்படிச் செய்ய முடியுமா?" என்ற ஆச்சரியத்தில் மிஷ்கின் பாராட்டியதாக அப்போது பலரும் கூறினர். அதேபோல் சினிமா வட்டாரத்தில் இருந்தும் பலரும் சுவாசிகாவின் பெயரைத் தனியாகச் சொல்லி பாராட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், ரசிகர்கள் அளித்த அன்பைப் பற்றி பேசும் போது சுவாசிகா கண்கலங்கி கதறி அழுத வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நடிகைக்கு பாராட்டு கிடைப்பது சாதாரணம். ஆனால் தன் உழைப்பை மக்கள் உண்மையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வால் கண்களில் கண்ணீர் வருவது.. அதுதான் அந்த வீடியோவை ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக்கி இருக்கிறது.
"இது சினிமா புரமோஷன் கண்ணீர் இல்ல... மனசிலிருந்து வந்த கண்ணீர்" என்று பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். விஜய் ஆண்டனி - சசி கூட்டணியில் ஏற்கனவே 'பிச்சைக்காரன்' போன்ற படம் வந்திருக்கிறது. அதனால் 'நூறு சாமி' மீதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை தாண்டி இப்போது இந்தப் படம் பேசப்படுவதற்குக் காரணம், அதன் கதை மட்டுமல்ல; அதில் சுவாசிகா கொண்டு வந்த உணர்ச்சி நம்பகத்தன்மை தான் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.
மொத்தத்தில், 'நூறு சாமி' சுவாசிகாவுக்கு ஒரு ஹிட் படம் மட்டும் இல்லை; தமிழ் ரசிகர்களிடம் அவரை தனியாக நின்று கொண்டாட வைத்த படம் என்றே சொல்லலாம். அதனால்தான் "இப்போ என் ஆக்ஸிஜனே தமிழ் ரசிகர்கள் தான்" என்ற அவரது வரிகள் சாதாரண நன்றி பதிவாக இல்லாமல், ஒரு நடிகையின் மனநிறைவு குரலாகவே ரசிகர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது.














Click it and Unblock the Notifications