மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா? சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏஐ! சூப்பர் ஐடியா!
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெரிசல் மேலாண்மை அமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முறை உதவியாக இருக்கும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கேரள சபரிமலை ஐயப்பன் கோவில், உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களின் அதிமுக்கிய புனிதத் தலமாக கருதப்படுகிறது. இங்கு குடிகொண்டிருக்கும் தர்மசாஸ்தா ஐயப்பனை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

ஆண்டுதோறும் சபரிமலைக்கு பக்தர்கள் வருவது வழக்கமாக இருந்தாலும், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் சபரிமலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுவதும், மணிக்கணக்கில் பக்தர்கள் காத்திருப்பதும் வழக்கமாகி வருகிறது.
சபரிமலை
இந்நிலையில், சபரிமலை கோவிலில் வரவிருக்கும் யாத்திரை காலம் முதல் செயற்கை நுண்ணறிவு பக்தர் மேலாண்மை அமைப்பை அறிமுகப்படுத்துவது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் அய்வு செய்து வருகிறது. சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் வாரியமும், கேரள காவல்துறையும் இணைந்து இதுகுறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுடன் சமீபத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது.
ஐயப்பன் கோவில்
இந்த ஆண்டு சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு யாத்திரை காலம் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 51 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.
செயற்கை நுண்ணறிவு
இதனை கருத்தில் கொண்டு, டெல்லி, சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த மூன்று முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது திட்ட முன்மொழிவுகளை நிபுணர் குழுவிடம் விளக்கியுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவசம் வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
பக்தர்கள் பாதுகாப்பு
இந்த திட்டம் தொடர்பாக அறிக்கை தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் கூறுகையில், சபரிமலையின் தனித்துவமான புவியியல் அமைப்பை கருத்தில் கொண்டு, கட்டம் கட்டமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.சபரிமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், வழக்கமான நகர்ப்புற கண்காணிப்பு அமைப்புகளை அங்கு பயன்படுத்த முடியாது. அதற்கேற்ற வகையில் தனிப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகள் உருவாக்கப்பட உள்ளன.
கேரள காவல்துறை
இதன் மூலம் பக்தர்கள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் தரிசனம் செய்யும் சூழல் ஏற்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சபரிமலையில் காணாமல் போகும் நபர்களை விரைவாக கண்டுபிடிப்பதற்கும் இந்த தொழில்நுட்பம் உதவும் என கூறப்படுகிறது. அதேபோல், 26 வாகன நிறுத்துமிடங்களில் இருந்து பக்தர்கள் நகர்வதை மனித தலையீடு இல்லாமல் கண்காணித்து ஒழுங்குபடுத்தவும் இந்த அமைப்பு உதவும். தற்போது திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
நவீன கேமராக்கள்
புதிய தொழில்நுட்பம் அறிமுகமானால் காவல்துறையினரின் பணிச்சுமையும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கூட்ட மேலாண்மை அமைப்பில் நவீன கேமராக்கள், ட்ரோன்கள் மற்றும் புவியியல் தகவல் வரைபட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கேமராக்கள் மூலம் கிடைக்கும் காணொளி பதிவுகளை செயற்கை நுண்ணறிவு அமைப்பு தொடர்ந்து ஆய்வு செய்து, எந்த பகுதியில் கூட்ட நெரிசல் அதிகரிக்கிறது என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும்.
டிஜிட்டல் சாதனங்கள்
இதன் மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடி எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்படும். கூட்ட நெரிசல் உருவாகும் வாய்ப்பு உள்ள பகுதிகள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைப்பதால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு டிஜிட்டல் சாதனங்கள் மூலம் நேரடி தகவல்கள் வழங்கப்படும்.
தேவசம் போர்டு
சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பை மேம்படுத்தும் இந்த முயற்சி முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கூட்ட நெரிசல், பாதுகாப்பு சவால்கள் மற்றும் அவசரநிலை சூழல்களை சமாளிப்பதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் நம்புகின்றனர். இதனால் வரும் யாத்திரை காலத்தில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு மேலும் பாதுகாப்பான மற்றும் சீரான தரிசன அனுபவம் கிடைக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications