காலேஜ் இருக்கும் இடத்தை தப்பாக காட்டிய கூகுள் மேப்.. நீட் தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில், கூகுள் மேப்ஸ் காட்டிய தவறான பாதையால் சில நீட் தேர்வை எழுத முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல, கர்நாடகாவில் காங்கிரஸ் நடத்திய மாநாடு காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சரியான நேரத்திற்கு தேர்வு மையத்திற்கு போக முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
லோக்கல் ஏரியா எனில், ஆட்டோ ஓட்டுநரிடம் வழிகேட்டால் சொல்லிவிடுவார்கள். ஆனால், நீட் சென்டர் வெளியூரில் இருந்ததால், கூகுள் மேப்பை நம்பி நீட் தேர்வர்கள் சென்றிருக்கிறார்கள். இப்படி போகும்போதுதான் கூகுள் மேப் வேலையை காட்டியிருக்கிறது.

வேலையை காட்டிய கூகுள் மேப்
சம்பல் பகுதியைச் சேர்ந்த பைசன் அலி என்ற மாணவர், தனது தேர்வு மையத்தைக் கண்டறிய கூகுள் மேப்ஸை நம்பியுள்ளார். அவர் செல்ல வேண்டிய 'ஆர்.என். இன்டர் காலேஜ்' (RN Inter College) இடத்திற்குப் பதிலாக, கூகுள் மேப்ஸ் வேறொரு தவறான இடத்தைக் காட்டியுள்ளது. இதனால் அவர் உண்மையான தேர்வு மையத்திற்குச் சென்றபோது, அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. தாமதமாக வந்த காரணத்தால் அவருக்குத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
சொதப்பிய கூகுள்
இதேபோல், சர்தக் என்ற மற்றொரு மாணவரும் கூகுள் மேப்ஸால் திசை திருப்பப்பட்டு, சரியான நேரத்திற்குத் தேர்வு மையத்தை அடைய முடியாமல் போனார். அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில், ஹாப்பூர் மாவட்டத்தில் கூகுள் மேப்ஸ் காட்டிய பாதையைப் பின்பற்றிச் சென்ற கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கார், ஆழமான கால்வாயில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
ஆடை கட்டுப்பாடு
அதேபோல நாடு முழுவதும் நீட் தேர்வு பெரும்பாலும் பெரிய இடையூறுகள் இன்றி நடந்தாலும், சில மாநிலங்களில் ஆடை கட்டுப்பாடு மற்றும் தாமதமான வருகை காரணமாக மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போன சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், புர்கா அணிந்து வந்த குல்சம் பானு என்ற மாணவிக்குத் தேர்வு மையத்திற்குள் நுழைய முதலில் அனுமதி மறுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதிகாரிகள் அவரது துப்பட்டா மற்றும் புர்காவை அகற்றச் சொன்னதாக அவர் குற்றம் சாட்டினார். இது சமூக வலைதளங்களில் விவாதமான நிலையில், அந்த மாணவி பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை (NTA) விளக்கம் அளித்தது.
கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்திலும், ஒரு மாணவர் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதே போன்ற புகார்கள் டெல்லி, மும்பை, போபால் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்தும் வந்தன.
பெங்களூரு போக்குவரத்து நெரிசல்
பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி சார்பில் அரண்மனை மைதானத்தில் (Palace Grounds) நடத்தப்பட்ட பிரம்மாண்ட அரசியல் மாநாடு மற்றும் பேரணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பல மாணவர்கள் தேர்வு மையங்களுக்குச் செல்ல தாமதமானது.
மதியம் 1:30 மணிக்குத் தேர்வு மையக் கதவுகள் மூடப்பட்ட பிறகு, சில நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்கள் கதறிக் அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இது தொடர்பாக பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, காங்கிரஸ் அரசைக் கடுமையாக விமர்சித்தார்.
காங்கிரஸின் மிஸ்டேக்
"மாணவர்கள் மீது ராகுல் காந்திக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதும் இதே நாளில் இவ்வளவு பெரிய பேரணியை நடத்தியிருக்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சி தனது பேரணியை வேறு எந்த நாளிலாவது நடத்தியிருக்கலாம்" என்று அவர் சாடினார்.












Click it and Unblock the Notifications