தமிழ்நாட்டில் 7 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் 7 தொகுதி இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் வென்றார். இதில் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.

அதிமுகவில் அடுத்தடுத்த ராஜினாமாக்கள்
இதையடுத்து தமிழக அரசியலில் மற்றொரு பெரும் புயல் வீசத் தொடங்கியது. அதிமுகவின் தலைமைக்கும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் ஏற்பட்டதால் வரிசையாக நிர்வாகிகள் ராஜினாமா செய்ய தொடங்கினர்.
அதன்படி அதிமுகவைச் சேர்ந்த 6 முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகள் காரணமாக கரூர் தொகுதியின் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியின் சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதியின் ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் தொகுதியின் இசக்கி சுப்பையா, மதுராந்தகம் தொகுதியின் மரகதம் குமாரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியின் சத்யாபாமா ஆகிய 6 எம்எல்ஏக்களும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
7 தொகுதிகள் காலி - நீதிமன்றத்தில் வழக்கு
விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களின் 6 தொகுதிகள் என ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் தற்போது 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 7 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையேயும், அரசியல் கட்சிகளிடையேயும் பரவலாக எழுந்துள்ளது.
இதற்கிடையில், இந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாக்கள் மற்றும் அது சார்ந்த அரசியல் நகர்வுகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த ராஜினாமாக்கள் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதம் மற்றும் அதன் பின்னணி குறித்த விசாரணைகள் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இடைத்தேர்தலுக்கு எதிராக வழக்கு
அதேபோல் நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரப் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் மிக முக்கியமான சட்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேரின் கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு எதிராக, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதை அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவர்களுக்கு எதிரான தேர்தல் முறைகேடு மற்றும் வெற்றிக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இவர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள் என்பதற்காக அந்தத் தொகுதிகளுக்கு அவசரமாக இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் மிக வலுவான கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து, தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மொத்தமுள்ள இந்த 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தேர்தல் நடத்த நீதிமன்றம் தற்காலிக முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஜூலை 31ம் தேதி வரை இடைக்கால தடை உள்ளது.
இந்த வழக்குகளில் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி அமையப் போகிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும் என்பதால், அனைத்து கட்சிகளும் இந்த வழக்கின் முடிவை உற்று நோக்கி வருகின்றன.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அதிரடி அறிவிப்பு
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழக இடைத்தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மிகத் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன என்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாத காலத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதிமுறை ஆகும். அதனடிப்படையில், தமிழகத்தின் இந்த 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான 6 மாத கால அவகாசம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.
தற்போது இந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாக்கள் தொடர்பான பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை தேர்தல் ஆணையம் முழுமையாகக் கருத்தில் கொண்டுள்ளது. நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகள் அனைத்தும் முழுமையாக விசாரணை செய்யப்பட்டு, இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே, தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தலைமை தேர்தல் ஆணையரின் இந்த அறிவிப்பின் மூலம், நீதிமன்ற வழக்குகள் முடியும் வரை தமிழகத்தில் உடனடியாக இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.














Click it and Unblock the Notifications