மீண்டும் போராட்ட களத்தில் விவசாய அமைப்புகள்? கரப்பான் பூச்சி கட்சியிடம் இருந்து போன அழைப்பு! பரபரப்பு
டெல்லி: தலைநகர் டெல்லியில் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த போராட்டம் 3வது நாளாக நீடிக்கிறது. இதனால் அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் முதலில் நையாண்டி இயக்கமாகத் தொடங்கப்பட்ட கரப்பான் பூச்சி கட்சி இப்போது வீதிகளில் இறங்கி போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. நீட் முறைகேடுகளுக்கு எதிராக இந்த இயக்கம் போராட்டம் நடத்தி வருகிறது. பெங்களூர், ஜெய்ப்பூர், நாக்பூர் எனப் பல இடங்களில் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இப்போது டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

3வது நாளாக நீடிப்பு
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நடத்தி வரும் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை மதியம் தொடங்கிய இந்தப் போராட்டம், இரவு பகலாக நீடித்து வருகிறது. போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பாகவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் போலீசார் அந்தப் பகுதியில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி சொன்ன திப்கே
இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருக்கும் மாணவர்களுக்குத் தன்னார்வலர்கள் ஜூஸி மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி உதவி வருகின்றனர். போராட்டத்தின் மூன்றாவது நாளைத் தொடங்கிய சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, மாணவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்த தன்னார்வலர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். போராட்டக் களத்தில் வெறும் கோஷங்கள் மட்டுமல்லாமல், தேசபக்திப் பாடல்கள் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி சுமார் 200க்கும் மேற்பட்டோர் அங்குத் திரண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜினாமா செய்ய வேண்டும்
இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் அபிஜீத் திப்கே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மிகத் தீவிரமாக வலியுறுத்தியுள்ளார். தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அவர் விலக வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும், நீட் வினாத்தாள் கசிவு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முறைகேடு புகாருக்கு உள்ளான இந்தத் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றச்சாட்டு
போராட்டத்தின் போது சில அடிப்படை வசதிகள் முடக்கப்பட்டதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, பொதுக் கழிப்பறைகளுக்கான தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்குப் பிறகு அது சரிசெய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். போராட்ட இடத்திற்கு மக்கள் வருவதைத் தடுக்க வேண்டாம் என்றும் அடிப்படை வசதிகளைத் துண்டிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளிடம் திப்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு விவசாயச் சங்கங்களுக்கும் பொதுமக்களுக்கும் அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக இன்று பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டத்தில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போலீஸ் பாதுகாப்பு
தற்போது ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களைச் சுற்றி இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிரமாக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீட் முறைகேடு தொடர்பாக சிஜேபி நடத்தும் இரண்டாவது பெரிய போராட்டம் இதுவாகும். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications