தமிழகத்தில் இன்று
ராமதாஸிடமிருந்து வன்னியர்களை மீட்க வேண்டும்: வாழப்பாடி
சென்னை:
வன்முறையை பரப்பும் ராமதாஸ் கும்பலிடம் இருந்து வன்னியர்களை மீட்க வேண்டும் என்று டாக்டர் ராமதாசுக்கு எதிராக தாம் துவங்கிய வன்னியர்சங்கத் தொடக்க விழாவில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பேசினார்.
டாக்டர் ராமதாசின் வன்னியர் சங்கத்திற்கு எதிராக போட்டி வன்னியர் சங்கம் ஒன்றை வாழப்பாடி ராமமூர்த்தி ஆரம்பித்துள்ளார். இதற்கான தலைமைஅலுவலகம் சென்னை அடையாரில் திறக்கப்பட்டது.
இவ்விழாவில் வன்னியர் சங்கத் தலைவர் சி.என்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். வன்னிய அடிகளார் உள்ளிட்ட வன்னியர் சமுதாய பிரமுகர்கள் பேசினர்.
நிகழ்ச்சியில் வன்னியர் சங்கக் கொடியை அறிமுகப்படுத்தி வைத்து வாழப்பாடி ராமமூர்த்தி பேசியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க, தி.மு.க, ஆகிய இரு கட்சிகளை வைத்துத் தான் வெற்றி பெற முடியும். அதை உணராமல் ராமதாஸ் 91ல் தனித்துபோட்டியிட்டு பல வன்னியர்களை ஏழைகளாக ஆக்கினார். அடையாளம் தெரியாமல் இருந்த அவர் எங்களைப் பார்த்து அனாதைகள் என்கிறார்.
இரண்டு கோடி வன்னியர்களுக்கு பல சங்கங்கள் இருப்பதில் தவறில்லை. சமுதாயத்திற்கு நல்லது செய்வதில் போட்டி ஏற்பட வேண்டும் என்று நான்விரும்புகிறேன். வன்னியர்கள் என்றாலே அடிப்பான், உதைப்பான் என்ற உணர்வு சமுதாயத்தில் உள்ளது. அதை மாற்ற வேண்டும்.
வன்முறை பரப்பும் ராமதாஸ் கும்பலிடம் இருந்து வன்னியர்களை மீட்பது தான் நமது கடமை.
இந்த சங்கம் சார்பில் 3 அறக்கட்டளைகள் நிறுவப்படும். வன்னியர் அமைப்புகள் தங்களது பகுதியில் கல்வி நிறுவனங்கள் துவங்க முன் வந்தால் அதற்குகல்வி அறக்கட்டளை உதவி புரியும்.
சமுதாயத்தைச் சேர்ந்த வசதி இல்லாத மாணவர்களை பிளஸ் டூ வகுப்பிற்கு கீழ் மற்றும் அதற்கு மேல் இரண்டு பிரிவாகப் பிரித்து அவர்கள் படிப்பிற்கு கடன்வசதி உதவி வழங்கி அவர்கள் வேலைக்கு சென்றவுடன் வசூலிக்கும் வகையில் இரண்டாவது அறக்கட்டளை உதவும்.
சமுதாய திருமண மண்டபங்கள் கட்ட மூன்றாவது அறக்கட்டளை உதவும். இந்த மூன்று அறக்கட்டளைகளுக்கென ஒரு கோடி ரூபாய் நிதி வசூல் செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. எனது சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்குகிறேன்.
ஜூன் 8ம் தேதி வன்னியர் விழிப்புணர்வு மாநாடு சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறுகிறது. மாநாட்டில் ராமதாஸ் தவிர அனைத்து வன்னியர்தலைவர்களும் பங்கேற்பர்.
ராமதாஸ் ஊருக்கு ஒன்றாக பேசி வருகிறார். அவருக்கு மூளை சரியாக இருக்கிறதா என்பதை சந்தேகிக்க வேண்டியதுள்ளது என்றார்.