தமிழகத்தில் இன்று
காஷ்மீரில் ஊடுருவக் காத்திருக்கும் 3,000 தீவிரவாதிகள்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட மத்திய அரசு முயற்சித்து வரும் வேளையில் சுமார் 3,000 தீவிரவாதிகள்இந்தியாவுக்குள் ஊடுருவத் தயாராக பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் காத்துக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து வன்முறை, தாக்குதல்களை சந்தித்து வரும் காஷ்மீருக்கு இந்த மே மாதம் மிக முக்கியமானதாக அமையப் போகிறது.ஒரு பக்கம் பனி உருகுவதால் இந்தியாவுக்குள் ஊடுருவத் தயாராக காத்திருக்கும் தீவிரவதிகள்.
மறுபக்கம் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த தயார் என இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பு. சில தீவிரவாத அமைப்புகள் இந்தபேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முன் வந்துள்ளன.
ஆனால், இந்தப் பகுதியில் அமைதி திரும்புவதை எக்காரணம் கொண்டும் விரும்பாத பாகிஸ்தான் தீவிரவாதிகளை அதிகஅளவில் ஊடுருவச் செய்து வருகிறது. சமீபத்தில் மிக நவீன ஆயுதங்கள் கூட தீவிரவாதிகளிடமிருந்து பிடிபட்டுள்ளன.தற்கொலைப் படைகளை ஏவிவிட்டு ராணுவ முகாம்களை தாக்குவதும் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் முதல் சுமார் 40 முறை இது போன்ற தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 100 ராணுவ வீரர்கள்பலியாகியுள்ளனர்.
இதே நேரத்தில் அரசின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கும் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. பேச்சுவார்தைக்குத் தயாராகஇருக்கும் தீவிரவாத அமைப்புகள் இந்த மாதத்தில் புதிய தாக்குதல்கள் எதையும் நடத்த மாட்டார்கள் என அரசியல்பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதனால், இந்த மாதத்தில் ஓரளவு அமைதி நிலவவும் வாய்ப்புள்ளது. பல்வேறு தீவிரவாதஅமைப்புகளை உள்ளடக்கிய அரசியல் அமைப்பான அனைத்துக் கட்சி ஹரியத் கான்பரன்ஸ் கட்சி முதல் முறையாகபேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளது.
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தக் கட்சிகளின் தலைவர்களையும் அரசு கட்டம் கட்டமாக விடுவித்து வருகிறது. முக்கியதலைவர்களான சையத் அலி ஷா ஜீலானி, அப்துல் கனி பட் ஆகியோரை சமீபத்தில் அரசு விடுவித்தது.
ஆனால், இவர்கள் இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர் என மூன்று தரப்பிலிருந்தும் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள வேண்டும் எனக் கூறி வருவது நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
அமைதிக்காக ஏங்கும் காஷ்மீர் மக்களின் நெருக்குதல் தான் இந்த தீவிரவாத அமைப்புகளை பேச்சுவார்த்தைக்கு வரச்செய்துள்ளது. 1989ம் ஆண்டிலிருந்து நடந்து வரும் வன்முறையால் தாக்குதல்களால் சுமார் 20,000 பேர் பலியாகியுள்ளனர். இந்தமாநிலத்தின் சுற்றுலாத் தொழில் நலிவடைந்தால் முழுப் பொருளாதாரமும் சீர்கெட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.