தமிழகத்தில் இன்று
மே 10, 2000
கண்ணம்மா - என் காதலி - 6
பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு,
வாயரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!(1)
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!(2)
வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமது நல்லழகே! ஊறுசுவையே! கண்ணம்மா!(3)
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின் சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா(4)
வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு, பேணு மொழி நாணுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்ம(5)
காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ யெனக்கு விந்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே; நல்ல உயிரே கண்ணம்மா!(6)
நல்லவுயிர் நீ யெனக்கு , நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!(7)
தாரையடி நீ யெனக்கு தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவ மாய்ச் சமைந்சாய்! உள்ளமுதே! கண்ணம்மா!(8)
(அடுத்தது கண்ணன் என் ஆண்டான்)
Back To Index












Click it and Unblock the Notifications