தமிழகத்தில் இன்று
சென்னை:
ஜெயா "டிவிக்கு ரூ.50 லட்சம் கட்சிப் பணம் கொடுக்கப்பட்டது. அதிமுக தொண்டர்கள் கொடுத்த கட்சிப் பணத்தை மன்னார்குடி குடும்பம் உறிஞ்சுகிறது என்றுஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா கூறினார்.
இதுகுறித்து அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
லட்சக் கணக்கான தொண்டர்கள் தந்த நிதியாலும், பல முன்னாள் அமைச்சர்கள் வசூலித்துக் கொடுத்த பணத்தாலும் வாங்கிய, கட்சித் சொத்தான சபையர்தியேட்டர் வளாகத்தை மிக ரகசியமாக விற்க வேண்டிய அவசியம் என்ன எனக் கேட்டிருந்தோம்.
பல கோடி பெறுமான தொண்டர்களின் சொத்தை நியமன செயற்குழுத் தீர்மானம் மூலம் விற்க முடியுமா என்ற சட்டப் பிரச்னை வெகுவிரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் எனது வழக்கில் எழுப்பப்படும்.
இதற்கிடையில் காளித்து பெயரில் ஒரு அறிக்கை வந்துள்து. அவராகவே வெளியிட்ட அறிக்கையா என்பது கூட விசாரணைக்கு உரிய செய்தி. கட்சிச் சொத்தின்மூலம் ஜெயா டிவி இயங்க வேண்டிய நிலை என்று அவர் கூறியுள்ளார்.
ஜெயா டிவி ஆரம்பமாவதற்கு முன்னரே 1999 ஆகஸ்ட் மாதத்திலேயே கட்சிப் பணம் 50 லட்ச ரூபாய் சுளையாக ஜெயா டிவிக்கு கொடுக்கப்பட்டது.
கட்சித் தொண்டன் கொடுத்த பணத்தை எப்படியெல்லாம் மன்னார்குடி குடும்பம் உறிஞ்சுகிறது என்பதற்கு இப்படி பல நிகழ்வுகளைச் சொல்லமுடியும்.தற்போது இது ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.
இந்த 50 லட்சத்திற்கு செயற்குழு ஒப்புதல் ஏன் பெறவில்லை? மூடி மறைக்கும் முயற்சியா? என்பதை தொண்டர்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன் என்றுகூறியுள்ளார்.