தமிழகத்தில் இன்று
சென்னை:
எம்.எல்.ஏவின் கனவு நனவாவது எப்போது என்பது பற்றி சுவாரஸ்யமான விவாதம் சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சட்டசபையில் செவ்வாய்க் கிழமை சட்டமன்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சிவ புண்ணியம் பேசினார்.
அவர் பேசும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி வளர்ச்சி நிதிக்கென அரசு ஆண்டுதோறும் 60 லட்ச ரூபாய் ஒதுக்கிறது. அந்த தொகையை ஒருகோடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை, நகைச்சுவையாக வலியுறுத்தினார்.
அமைச்சர் அன்பழகன் நேற்று இரவு ஒரு மணியளவில் என் கனவில் வந்தார். சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியை ஒரு கோடி ரூபாயாகஉயர்த்தி தருகிறேன் என்றார். பின்னர் மஞ்சள் துண்டு சகிதம் முதல்வரும் என் கனவில் தோன்றினார். அவரும் உறுதி சொன்னார் என்றார் சிவ புண்ணியம்.
உடனே அமைச்சர் அன்பழகன் எழுந்து அந்த கனவு கனவாகவே இருந்து விட்டுப் போகிறது என்று பதிலளித்தார். அதைக் கேட்டு உறுப்பினர்கள்சிரித்துக் கொண்டிருந்த வேளையில் முதல்வர் சபைக்குள் நுழைந்தார்.
முதல்வருடைய வருகையைப் பார்த்துக் கொண்டே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இன்னொரு உறுப்பினர் சுப்பராயன் எழுந்து , கனவை நிறைவேற்றமுதல்வர் வந்திருக்கிறார் என்றார். அதற்கு முதல்வர் குறுக்கிட்டு, நிச்சயமாக நிறைவேறும் - கனவில் என்று சொன்னதும் பேரவையில் பெரும்சிரிப்பலை எழுந்தது.