தமிழகத்தில் இன்று
மே 25, 2000
நான்காம் நாள்
(தொடர்ச்சி)
கொண்டிருத்தல் கண்டேன், குமைந்தேன் எதிரேபோய்
நீசக் குயிலே, நிலையறியாப் பொய்ம்மையே,
ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும்
எண்ணிநீ பாடும் இழிந்த புலப்பாட்டை (35)
நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை
என்று சினம் பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன்.
கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன் மறுபடியும்
நெஞ்ச மிளகி நிறுத்தி விட்டேன் ஈங்கிதற்குள்
வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கிக் (40)
கண்ணிலே பொய்நீர் கடகடனத் தானூற்றப்
பண்ணிசையோ லின் குரலாற் பாவியது கூறிடுமால்
ஐயனே, என்னுயிரின் ஆசையே, ஏழையெனை
வையமிசை வைக்கத் திருவுளமோ? மற்றெனையே
கொன்றுவிடச் சித்தமோ? கூறீர், ஒரு மொழியில் (45)
அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது
ஞாயிறுதான் வெம்மைசெயில், நாண்மலர்க்கு வாழ்வுளதோ?
தாயிருந்து கொன்றால் , சரண்மதலைக் கொன்றுளதோ?
தேவர் சினந்து விட்டால், சிற்றுயிர்கள் என்னாகும்?
ஆவற் பொருளே! அரசே! என் ஆரியரே; (50)
சிந்தையில் நீர் என்மேற் சினங்கொண்டால் மாய்ந்திடுவேன்
வெந்தழலில் வீழ்வேன், விலங்குகளின் வாய்ப்படுவேன்.
குற்றம்நீர் என்மேற் கொணர்ந்ததனை யானறிவேன்
குற்றநுமைக் கூறுகிலேன் குற்றமிலேன் யானம்ம!
புன்மைக் குரங்கைப் பொதிமாட்டை நான்கண்டு (55)
மென்மையுறக் காதல் விளையாடி னேன்என்றீர்
என்சொல்கேன் ! எங்ஙனுய்வேன்! ஏது செய்கேன், ஐயனே
நின்சொல் மறுக்க நெறியில்லை ஆயிடினும்
என்மேல் பிழையில்லை யாரிதனை நம்பிடுவார்
நின்மேல் சுமைமுழுதும் நேராகப் போட்டுவிட்டேன். (60)
வெவ்விதியே! நீ என்னை மேம்பாடுறச் செய்து
செவ்விதினிங் கென்னை என்றன் வேந்தனொடு சேர்த்திடினும்
அல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமெ
புல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட, நான்
அக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும், (65)
எக்கதிக்கும் ஆளாவேன் என் செய்கேன்? வெவ்விதியே!












Click it and Unblock the Notifications