தமிழகத்தில் இன்று
மே 25, 2000
குயில் தனது பூர்வ ஜென்மக் கதையுரைத்தல்
போவதன் முன்னொன்று புகல்வதனைக் கேட்டருள்வீர்!
முன்னம் ஒருநாள் முடிநீள் பொதியமலை
தன்னருகே நானும் தனியயோர் சோலைதனில்
மாங்கிளையி லேதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன் (5)
ஆங்கு வந்த ஓர் முனிவர் ஆரோ பெரியாரென்று
பாதத்தில் வீழ்ந்து பரவினேன் ஐயரெனை
ஆதரித்து வாழ்த்தி அருளினார்,மற்றதன் பின்
வேத முனிவரே, மேதினியில் கீழ்ப்பறவைச்
சாதியிலே நான் பிறந்தேன் , சாதிக் குயிலகளைப்போல் (10)
இல்லாமல், என்றன் இயற்கை பிரிவாகி,
எல்லார் மொழியும் எனக்கு விளங்குவதேன்?
மானுடர்போல் சித்தநிலை வாய்த்திருஞ் செய்தி யேன்?
யானுணரச் சொல்வீர் என வணங்கிக் கேட்கையிலே,
கூறுகின்றார் ஐயர் குயிலே! கேள் முற்பிறப்பில் (15)
வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன்
வீர முருகனெனும் வேடன் மகளாகச்
சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில்
வந்து பிறந்து வளர்ந்தாய் நீ, நல்லிளமை
முந்து மழகினிலே மூன்று தமிழ் நாட்டில் (20)
யாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே
சீருயர நின்றாய் செழுங்கான வேடரிலுன்
மாமன் மகனொருவன், மாடனெனும் பேர்கொண்டான்,
காமன் கணைக்கிரையாய் நின்னழகைக் கண்டுருகி,
நின்னை மணக்க நெடுநாள் விரும்பி,அவன் (25)
பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு
நித்தம் கொடுத்து நினைவெல்லாம் நீயாகச்
சித்தம் வருந்துகையில், தேமொழியே, நீயவனை
மாலையிட வாக்களித்தாய் மையலினா லில்லை அவன்
சால வருத்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய். (30)












Click it and Unblock the Notifications