ஆசியக் கோப்பை கிரிக்கெட்: மழையால் முதல் போட்டி தள்ளிவைப்பு
டாக்கா:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கும், பங்களாதேஷுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த முதல் ஆட்டம் பலத்தமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
மழை இல்லாத பட்சத்தில் இந்த ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறும். மீண்டும் மழையால் இந்த ஆட்டம் தடைபட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒருபுள்ளிகள் வழங்கப்படும்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. ஆனால், கடந்த சில நாட்களாக டாக்கா மற்றும்அதைச் சுற்றிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், முதல் ஆட்டம் நடைபெறுவது சந்தேகம் என்று கூறப்பட்டது. அதைப் போலவே முதல்ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
மழை தொடரும் என்று வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இது போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும்ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை அம்பயர்கள் மைதானத்தைச் சோதித்தனர். ஆனால், மைதானம் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நிற்காமல் பெய்துகொண்டே உள்ளது. பிட்சுக்கள் தார்பாலின் போட்டு நன்றாக மூடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் நடைபெறுவதற்கான சாத்தியம்முற்றிலும் இல்லை என்று அம்பயர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இப் போட்டி திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.