அக்ரம் பந்து வீச்சில் சுருண்டது மேற்கிந்தியத் தீவுகள்
செயின்ட் ஜான்ஸ் (ஆன்டிகுவா):
பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 273 ரன்களுக்குஆட்டமிழந்தது.
ஆன்டிகுவாவில் நடைபெறும் இந்த டெஸ்டில் 3-வது நாளான சனிக்கிழமை காலை 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் என்ற நிலையில், தனது முதல்இன்னிங்ஸை மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ந்தது.
60 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ஆடம்ஸ், மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் வக்கார் யூனிஸ் பந்தில் அவுட்டானார். அதன் பிறகு மற்றவீரர்களும் சிறப்பாக ஆடவில்லை. ஏனெனில் பாகிஸ்தான் அணியின் வாஸிம் அக்ரம் சிறப்பாக பந்து வீசி மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களைஅவுட்டாக்கினார்.
முந்தைய தினம் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் இருந்த அவர், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கடைசி 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அவர், 61ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சரிவை ஏற்படுத்தினார். இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 273 ரன்களுக்குஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக சந்தர்பால் 89 ரன்கள் எடுத்தார்.
முதல் இன்னிங்ஸில் 3 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸைப் பாகிஸ்தான் தொடங்கியது. முதல் இன்னிங்ஸைப் போலவே துவக்கஆட்டக்காரர்கள் சரியாக விளையாடவில்லை. இம்ரான் நசீர் ரன் எடுக்காமல் அவுட்டானார். 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பாகிஸ்தான்இழந்தது.
இதையடுத்து, வழக்கம் போலவே தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இன்சமாம் உல் ஹக்கும், யூசுப் யுகானாவும் அணியின் சரிவை தடுத்து நிறுத்தினர்.இருவரும் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 80 ரன்கள் குவித்தனர். இந் நிலையில், முதல் இன்னிங்ஸைப் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதமடித்த இன்சமாம் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3-ம் நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள்எடுந்திருந்தது. யுகானா 41 ரன்களுடனும், சக்லைன் முஷ்டாக் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கிங் 2 விக்கெட்டுகளையும் வால்ஷ், ஆம்புரோஸ், ரோஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போதுபாகிஸ்தான் அணி 154 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் அதனிடம் 5 விக்கெட்டுகள் உள்ளன. டெஸ்ட் முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில்,நிச்சயம் இந்த டெஸ்டில் முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டெஸ்டில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும். ஏனெனில் ஏற்கெனவே நடந்த இரு டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications