ஆசியக் கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் இலங்கை பெரும் வெற்றி
டாக்கா:
பங்களாதேஷுக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
7-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டியஇலங்கைக்கும், பங்களாதேஷுக்கும் இடையேயான ஆட்டம் பலத்த மழை காரணமாக திங்கள்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பங்களாதேஷ் அணியை பேட் செய்யும்படி கேட்டுக் கொண்டது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணிநிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது.
பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக ஜாவித் ஓமர் 85 ரன்களும், அக்ரம் கான் 41 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் வாஸ் சிறப்பாகப் பந்து வீசிஇரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
50 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், தனது இன்னிங்ஸை இலங்கை துவங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாககேப்டன் ஜெயசூர்யா, அரவிந்த டிசில்வா களமிறங்கினர்.
வழக்கமான அதிரடி ஆட்டம் ஆடிய ஜெயசூர்யா 28 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த அட்டபட்டு, அரவிந்த டிசில்வாவுடன் ஜோடி சேர்ந்தார்.இருவரும் தங்களது விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர்.
இறுதியில் 30.4 ஓவரில் 178 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றி பெற்றது. துவக்கத்தில் நிதானமாக விளையாடி அரவிந்த டிசில்வா ஆட்டத்தின்பிற்பகுதியில் சிறப்பாக ஆடி வேகமாக ரன் குவித்தார். அவர் 93 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடைய ஸ்கோரில் 3சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். அட்டபட்டு 41 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.
96 ரன்கள் குவித்த அரவிந்த டிசில்வா ஆட்ட நாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன.